Also Watch
Read this
ஈரானுக்கு எதிரான ராணுவ தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இதனை தொடர்ந்து ஈரானும் தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தாக்குதல்களை நிறுத்தியிருப்பதாக அமெரிக்கா கூறினாலும் உண்மைக் காரணம் வேறு என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்கு தேவையான அமெரிக்க ஆயுதங்களின் கையிருப்பு பெருமளவு குறைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இது உண்மைதானா? அமெரிக்காவின் ஆயுதப் பற்றாக்குறை குறித்த தகவல்கள் எப்படி வெளியே தெரிந்தன? அதற்கு டிரம்ப் சொல்லும் பதில் என்ன? மீண்டும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுமா?
ஆயுதங்கள் பற்றாக்குறை...

ஈரானுக்கு எதிரான போரில், US central commandக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடைமறிப்பு ஏவுகணைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என ராணுவ தலைமைத் தளபதி டான் கெய்ன் (chairman of the joint chiefs of staff Dan Caine) தனிப்பட்ட முறையில் வெள்ளை மாளிகையை எச்சரித்ததாக New York Times கூறுகிறது.

கடும் சேதம் ஏற்படும்...
ஈரானிய ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை தடுக்க முயன்றபோது ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவி தாக்கியபோது ஜோர்டானில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் இதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது. எனவே, மோதல் மேலும் அதிகரித்தால், இடைமறிப்பு ஏவுகணைகள் பற்றாக்குறை, அமெரிக்க வீரர்களுக்கும், அதன் வளைகுடா நட்பு நாடுகளுக்கும் மற்றும் படைத் தளங்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிபர் டிரம்ப் மறுப்பு
பேட்ரியாட் மற்றும் தாட் ஏவுகணைகள் (Patriot and Thaad interceptor) பயன்பாடு குறித்த புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை வெளியிட வெள்ளை மாளிகை மறுத்துவிட்டதாகவும், அத்தகைய தரவுகளை வெளியிடுவது தேசிய பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தும் என்று வெள்ளை மாளிகை கூறுவதையும் அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் எதிரிகளின் வான்வழி தாக்குதலை இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகளுக்கு கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்ற தகவலை டிரம்ப் மறுத்துள்ளார்.

உலகின் பாதுகாவலர்கள்...
"உலகில் எந்த நாட்டையும் விட அமெரிக்காவிடம் மிக அதிகமான ஆயுதங்கள் உள்ளன, தேவையானதை விட மிக அதிகமாகவே உள்ளது" என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க ராணுவ ஆதிக்கத்தையும் ஈரானுக்கு எதிரான வல்லமையையும் சித்தரிக்கும் வகையில் AI மூலம் உருவாக்கிய படங்களை Truth Social தளத்தில் டிரம்ப் பகிர்ந்து கொண்டார். ‘உலகின் பாதுகாவலர்கள்’ என்ற தலைப்பில் ஒரு படம், அமெரிக்க போர் விமானங்கள் ‘ஈரான்’ என்று பெயரிடப்பட்ட இலக்குகளைத் தாக்குவதாக சித்தரித்தது.

இரு தரப்பு மோதல் நிறுத்தம்
இப்படி பெருமை அடித்துக் கொண்டாலும், ஈரான் மீதான தாக்குதலை டிரம்ப் திடீரென நிறுத்தியிருப்பது ஆயுதப் பற்றாக்குறை சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஆனால், "பேச்சுவார்த்தைக்கு அவகாசம் அளிக்கும் வகையில் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது," என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் (U.S. ambassador to the United Nations Mike Waltz) கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிரான பதிலடித் தாக்குதல்களை நிறுத்திவிட்டதாக ஈரானும் கூறியுள்ளது. இரு தரப்பும் மோதலை தணித்துக் கொண்டிருப்பது, பெட்ரோலியத் தொழில்துறைக்கு தற்காலிக நிம்மதியை கொடுத்துள்ளது. பேரலுக்கு 100 டாலர் என்ற நிலையில் இருந்து கச்சா எண்ணெய் விலையும் 90 டாலர்களாகக் குறைந்துள்ளது.

போருக்கு முற்றுப்புள்ளி?
ஜூன் மாதத்தில் அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த உடன்பாட்டை எட்டிய பிறகு, அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் ஹோர்முஸ் நீரிணையில் யார் ஆதிக்கம் செலுத்துவது என மூண்ட சண்டையானது, இருதரப்புக்கும் இடையிலான ராஜதந்திர முயற்சிகளைத் தடம் புரளச் செய்துள்ளது.

ஈரான், ஹோர்முஸ், பாப்-அல்-மந்தாப் நீர்வழிகள், வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்க படைத் தளங்கள் மோதலுக்கு இலக்காகின.

இரு தரப்பும் தாக்குதல்களை நிறுத்தியுள்ளதன் மூலம் மீண்டும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு, போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.