Also Watch
Read this
ஈரான் உடனான போர் தொடர்ந்திருந்தால், அது பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அப்படிப்பட்ட ஒரு பொருளாதாரப் பேரழிவைக் காண விரும்பவில்லை என்று, ஜூன் மாத இறுதியில் ஜி7 உச்சி மாநாட்டில் டிரம்ப் கூறினார். ஆனால், அதே டிரம்ப் இப்போது பொருளாதாரப் பேரழிவிற்கான வேலையை தொடங்கியிருக்கிறார்.

காரணமும் நோக்கமும் என்ன?
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் செவ்வாய்க்கிழமை மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. எரிவாயு ஏற்றிச் சென்ற, கத்தார் கொடி தாங்கிய அல்-ரக்கியாத் என்ற கப்பல், 'வெடியான்' Wedyan என்ற சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த லைபீரிய நாட்டு கொடி தாங்கிய கச்சா எண்ணெய் கப்பல் ஆகியவை தாக்கப்பட்டன. துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற, நேட்டோ உச்சி மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. நேட்டோ உச்சி மாநாட்டில் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்ட வேளையில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நிகழ்ந்தது. இதற்கான காரணமும் நோக்கமும் என்ன?

தாக்குதலின் இலக்கு...
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டதில் இருந்து, ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்படிச் செல்லும் பெரும்பாலான கப்பல்கள் ஓமானுக்கு அருகில் செல்லும் பாதையைப் பின்பற்றுகின்றன. ஆனால், தாங்கள் அங்கீகரித்த பாதைகள் வழியாகவே ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க வேண்டும், அதற்கு அனுமதி பெற வேண்டும் என்பது ஈரானின் நிலைப்பாடு. இந்த பின்னணியில் அனுமதி பெறாமல், Automatic Identification System எனப்படும் கப்பல்களை அடையாளம் காண உதவும் எலெக்ட்ரானிக் முறையை ஆஃப் செய்து விட்டு 3 கப்பல்களும் கடந்து செல்ல முற்பட்டபோது தான் தாக்குதலுக்கு இலக்காகின.

ஈரான் மீது தடைகள்
இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்களிலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. "சர்வதேச நீர்வழியில் வர்த்தக கப்பல்களை குறிவைத்துத் தாக்கியதற்குப் பதிலடியாக, ஈரானுக்குக் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், ஈரானுக்கு எதிராக தாக்குதல்கள் தொடங்கியுள்ளதாக" அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு சென்ட்காம் கூறியுள்ளது. மேலும் ஈரானிய கச்சா எண்ணெய் விற்பனை மீது அமெரிக்கா மீண்டும் தடைகளை விதித்தது. தடைகள் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்றோ அல்லது எந்த நிபந்தனைகளின் கீழ் அவற்றை மீண்டும் நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றோ டிரம்ப் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

மீண்டும் முற்றுகையா?
அமெரிக்க கருவூலத் துறையால் செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஈரானிய கச்சா எண்ணெய் வாங்குபவர்கள், ஜூலை 17ஆஆம் தேதிக்குள் பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் முற்றுகையால், பாரசீக வளைகுடாவிலிருந்து ஈரானிய எண்ணெய் வெளியேறுவது முற்றிலுமாகத் தடைபட்டது. இரு மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முறை, ராணுவப் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா மீண்டும் முற்றுகையிடப் போகிறதா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நிழல் உலக எண்ணெய் கப்பல் படை
அமெரிக்காவின் பொருளாதார தடைகளைத் தவிர்ப்பதற்காக, பல ஆண்டுகளாக, shadow fleet என்று சொல்லப்படும், நிழல் உலக எண்ணெய் கப்பல் படையை ஈரான் நம்பி இருந்தது. மேலும், தனது பெரும்பாலான பெட்ரோலியத்தை சீனாவுக்கு விற்று வந்தது. ஈரான் ஜூன் மாதத்தில் சுமார் 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்தது, அதில் பெருமளவு shadow fleet மூலமாகவே செய்யப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்த ஒப்பந்தம்... பிறகு...
ஜூன் 17ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்ட பிறகு, ஈரான் பெட்ரோலியத்தின் மீதான தடைகள் நீக்கப்பட்டன. இதனால், ஏற்கெனவே கப்பல்களில் ஏற்றப்பட்டிருந்த கோடிக்கணக்கான பேரல் கச்சா எண்ணெயை ஈரான் சுதந்திரமாக விற்க முடிந்தது. அமெரிக்கா உடனான சண்டை நிறுத்த ஒப்பந்தம், கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லவும், காப்பீடு செய்யவும், விற்கவும், முக்கியமாக, நிதி நிறுவனங்கள் மூலம் வருவாய் ஈட்டவும் உடனடி வாய்ப்பை வழங்கியது. இதற்கு ஒரு முக்கியமான பொருளாதார விளைவு இருந்தது.

சமாளிக்க முடியுமா?
எண்ணெய் விலை கடுமையாகச் சரிந்து, போருக்கு முந்தைய விலைகளுக்கும் கீழே குறைந்தன. ஹோர்முஸ் நீரிணை ஓரளவு மீண்டும் திறக்கப்பட்டதாலும், பல மாதங்களாக பாரசீக வளைகுடாவில் தேங்கிக் கிடந்த கச்சா எண்ணெய் படிப்படியாக வெளியேறத் தொடங்கியதாலும் கச்சா எண்ணெய் சந்தையில் உற்சாகம் காணப்பட்டது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகளும் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. ஆனால், மூன்று வார காலம் மட்டுமே, அதுவும் பகுதியளவு மட்டுமே ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டது. இந்த அவகாசம், உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய எண்ணெய் விநியோக அதிர்ச்சியைச் சமாளிக்கப் போதுமானதாக இல்லை.

ஈரான் மீது தாக்குல்
அமெரிக்காவை மட்டும் எடுத்துக் கொண்டால் கூட அந்நாட்டிற்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொள்ளவும், அமெரிக்காவிற்குத் தேவைப்படும் அவசர மற்றும் வர்த்தகக் கையிருப்புகளை மீண்டும் நிரப்புவதற்கு இந்த அவகாசம் போதுமானதாக இல்லை. 1929 முதல் 1933 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்த ஹெர்பர்ட் ஹூவருக்கு அமெரிக்க வரலாற்றில் ஒரு அவப்பெயர் உள்ளது. பொருளாதார மந்தநிலை கால அதிபர் என்றே ஹெர்பர்ட் ஹூவரை வரலாறு பதிவு செய்துள்ளது. அவருடன் தன்னையும் ஒப்பிட்டுப் பேசும் சூழல் உருவாகிவிடும் என்று அஞ்சிய டிரம்ப், நெருங்கி வரும் “பொருளாதாரப் பேரழிவைத்” தவிர்க்க திட்டமிட்டிருந்தார். ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம், இப்போது டிரம்பே அதில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளார்.

வெறும் 2 நாட்களுக்கு மட்டுமே
மத்திய கிழக்கில் அமெரிக்க படைத் தளங்களை குறிவைத்து ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இத்துடன் ஹோர்முஸ் நீர்வழிப்பாதை மீண்டும் மூடப்பட்டால், அமெரிக்கப் பொருளாதாரமும் உலகப் பொருளாதாரமும் விரும்பத்தகாத பாதிப்பைச் சந்திக்க நேரிடும். கடந்த மூன்று வாரங்களில் சுமார் 20 கோடி பேரல் கச்சா எண்ணெய் ஹோர்முஸ் நீரிணையிலிருந்து வெளியேறியுள்ளது. ஆனால், இது உலகளாவிய தேவையை வெறும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே ஈடு செய்யும். இருப்பினும், ஹோர்முஸ் நீர்வழிப்பாதை இடர்ப்பாடுகளுடனும் அபாயங்களுடனும் திறந்தே உள்ளது. அதேசமயம் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் எண்ணெய் இருப்பு
கச்சா எண்ணெய் விநியோகம் நின்றால், அது உலகளவில் பெட்ரோலியச் சந்தைக்கு மீண்டும் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். ஸ்டிரேட்டஜிக் பெட்ரோலிய இருப்பு (SPR) என்ற பெயரில், அமெரிக்கா அவசரகால எண்ணெய் கையிருப்பை சேமித்து வைத்துள்ளது. ஹோர்முஸ் மூடலால் இந்த சேமிப்பின் அளவு கணிசமாக சரிந்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டிரேட்டஜிக் பெட்ரோலிய இருப்பு தற்போது 32 கோடி பேரல்களாக உள்ளது. இது போருக்கு முந்தைய அளவோடு ஒப்பிட்டால் 23% குறைவு. 1983ல் அதிபர் ரீகன் நிர்வாகம் ஸ்டிரேட்டஜிக் பெட்ரோலிய இருப்பு வைக்கத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து பார்த்தால் தற்போதுள்ள கையிருப்பே மிகக் குறைந்த அளவாகும்.

முக்கியமான சோதனைகளில்...
இதைவிட முக்கியமாக, அமெரிக்காவின் வர்த்தக ரீதியான பெட்ரோலிய கையிருப்பு அபாயகரமான அளவிலேயே நீடிக்கிறது. இதன் காரணமாகவே, பொருளாதார மந்தநிலைக் கால அமெரிக்க அதிபர் ஹூவருடன் டிரம்ப் ஒப்பிடப்படும் நிலை அமெரிக்காவில் உருவாகியுள்ளது. “போர் தொடர்ந்திருந்தால், பொருளாதாரப் பேரழிவு நடந்திருக்கக்கூடும்” என்றும், “தான் ஒரு பொருளாதாரப் பேரழிவைக் காண விரும்பவில்லை,” என்றும் ஜூன் மாத இறுதியில் நடந்த ஜி7 மாநாட்டில் டிரம்ப் கூறினார். இப்போது அதற்கான வேலையைத்தான் டிரம்ப் செய்திருக்கிறார். அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம் அதன் மிக முக்கியமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொண்டுள்ளது.