Also Watch
Read this
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு கொடுத்த அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் சிலர் பின் வாங்கும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேச்சுவார்த்தை நடத்த தயார்
முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு அளித்தாலும் எடப்பாடி பழனிசாமி பின்னால் தான் நிற்போம் என்று, கே.சி.வீரமணி பேசியிருக்கும் நிலையில், இப்போதும் இ.பி.எஸ். அழைத்தாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என எஸ்.பி.வேலுமணி சமூக வலைதளத்தில் பதிவு போட்டிருப்பது கவனிக்க வைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பதவி பறிப்பு நடவடிக்கை, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பின் வாங்க வைத்ததா?

25 அதிமுக எம்எல்ஏக்கள்
அவ்வப்போது அடிக்கும் ஆடிக் காற்றுக்கு அசையும் ஆலமரமாக இருந்த அதிமுகவை, விஜய் என்ற புயல் மையம் கொண்டு ஆணிவேரையே அசைத்து பார்த்திருக்கிறது. தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்யை வைத்து அதிமுகவில் பெரும் பிரளயமே வெடித்து விட்டது. சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத சூழலில், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுகவில் 25 எம்.எல்.ஏ.க்கள் விஜய்க்கு ஆதரவாக வாக்கு அளித்தனர். எடப்பாடி பழனிசாமியின் எதிர்ப்பை மீறி ஆதரவளித்தது, கட்சியில் பிளவை உண்டாக்கியது.

எடப்பாடி பழனிசாமி Vs சி.வி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம் தரப்பு பேச, சி.வி.சண்முகம் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு COUNTER கொடுக்க என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இரு தரப்பிலும் ஆள் ஆளுக்கு ஒரு கொறடாவை நியமனம் செய்து, தங்களை தான் அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகருக்கு கடிதம் கொடுத்திருக்க, சென்னையில் திடீரென வானிலை மாறுவது போல, திடீரென அதிமுக அதிருப்தி அணியில் கிளைமேட் மாற தொடங்கி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கிய அணியை சேர்ந்தவர்கள், தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

இபிஎஸ் பக்கம் கே.சி.வீரமணி
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு அளித்தது ஏன்? என காரணங்களை விளக்கினார். திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக குறிப்பிட்ட கே.சி.வீரமணி, கிணற்றில் கூட குதிக்கலாம், எப்படி நெருப்பில் குதிப்பது என கேள்வி எழுப்பினார். அதோடு, தவெகவுக்கு சட்டமன்றத்தில் மட்டும் தான் ஆதரவு அளித்ததாக கூறிய கே.சி.வீரமணி, உயிருள்ள வரை தாம் அதிமுக தான், எடப்பாடி பழனிசாமி தான் தமக்கு பொதுச் செயலாளர், அவர் பின்னால் தான் நிற்கிறோம், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

கவனிக்க வைத்த எஸ்.பி.வேலுமணி பதிவு
இத்தனை நாட்களாக வேலுமணி அணியில் இருந்த கே.சி.வீரமணி, திடீரென எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவி விட்டாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, அதிருப்தி அணிக்கு தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்ட பதிவும் கவனிக்க வைத்துள்ளது. இப்போதும் இ.பி.எஸ். அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற வேலுமணி, எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்து பேசவில்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், எப்போதும் போங்க போங்க என விரட்டி அடிக்காமல் வாங்க வாங்க என்று ஒரு முறை அழைத்து பாருங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு வலியுறுத்தி எஸ்.பி.வேலுமணி அந்த பதிவை போட்டிருக்கிறார்.

வந்தார் பெஞ்சமின்
நேற்று வரைக்கும் எஸ்.பி.வேலுமணி அணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், பதவி பறிப்பு நடவடிக்கையை அடுத்து சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றிருக்கிறார். சமாதானம் பேசும் வகையில் பெஞ்சமின், எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலக குரல் எழுப்பிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழு பின் வாங்கி விட்டதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழையபடி நிலைமை மாறுமா?
தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து அடுத்தடுத்து ஆலோசனை என, சென்னை எம்.ஆர்.சி.நகரிலுள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால், திடீரென சி.வி.சண்முகத்தின் அலுவலகம் யாருமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. தனது உத்தரவை மீறி செயல்பட்ட எம்.எல்.ஏ.க்களின் கட்சி பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி, அந்த பதவிக்கு புதிதாக நிர்வாகிகளை நியமனம் செய்திருந்தார்.

அந்த நடவடிக்கையால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழு பின் வாங்கி விட்டதா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு நீண்ட தூரம் சென்று விட்ட நிலையில், இனிமேலும் மீண்டும் பழையபடி நிலைமை மாறுமா? எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தி அணி சமாதானமாகி, எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடல் போல ஐக்கியமாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.