Also Watch
Read this
கடந்தாண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நாட்டையே உலுக்கிய கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியான 41 பேரின் குடும்பத்தினரை ஜூலை 10ஆம் தேதி நேரில் சந்தித்து, முதல்வர் விஜய் ஆறுதல் கூறுகிறார்.
வாழ்நாள் துயரம் - நேரில் ஆறுதல்
கரூரில் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் 32 பேருக்கு கருணை அடிப்படையில் பணியாணைகளை முதல்வர் விஜய் வழங்க உள்ளார். பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் பணியாணை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

கரூர் நிகழ்வுக்கு 5,000 பேருக்கு அனுமதி
கரூரில், நாளை ஜூலை 10ஆம் தேதி காலை 11:30 மணிக்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் பங்கேற்கிறார். நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்ற உள்ள விழாவுக்கு 5,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் விஜயின் கரூர் பயணத்திற்கான முன்னேற்பாட்டு பணிகள் மும்முரம் அடைந்தது. வெண்ணெய் மலை பகுதியில் அரங்கம் அமைக்கப்பட்டு 6,700 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் நேரில் ஆய்வு
கரூரில் முதலமைச்சர் விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் அமைச்சர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கரும் உடனிருந்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
இந்நிலையில், 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக்கூடாது எனக்கூறி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேலும் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த சீனி அகமது என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வேலை வழங்கி பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்தனர்.

புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல்
கரூர் மாவட்டம், மனவாசி ஊராட்சியில் 1,700 கோடி ரூபாயில் அமையவுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 13,500 நபர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டும் விழா நடைபெறுகிறது.
Evervan Kothari Footwear Private Limited என்ற புதிய தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.