Also Watch
Read this
கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. கூட்ட நெரிசல் வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்துவிடும் என்பதால், அரசு வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கும் தவெக அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக, அவர் கூறி இருப்பதாவது;
தமிழக முதல்வர் விஜய், ஏற்கெனவே கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த போது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கப்போவதாகத் தவெக அரசு தற்பொழுது அறிவித்து உள்ளது.

கரூர் வழக்கின் தன்மை நீர்த்து போகும்...
தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது, உயிரழந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா? என்கிற நியாயமான கேள்வி எழுகிறது. 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்பு வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்.

சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது.

பொது வழிகாட்டுதல் வேண்டும்...
ஆகவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசுப் பணி வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை தவெக அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள அரசுப்பணி வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு சண்முகம் தெரிவித்து உள்ளார்.