Also Watch
Read this

திருமாவளவனின் கருத்துக்காக நோபல் பரிசே கொடுக்கலாம் என, நேற்று கிண்டலடித்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவனை கிண்டலடித்த பேச்சை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்தார்.

திரும்ப பெறுகிறேன்...
இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது;
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் கருத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற கருத்தை, திரும்ப பெறுகிறேன். திருமாவளவன் எனக்கு நெருங்கிய நண்பர் தான், யாரையும் புண்படுத்த வேண்டும் என்று பேசவில்லை. திருமாவளவனை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூறவில்லை.

திருமாவளவன் கருத்தால் அதிர்ச்சி
திருமாவளவன் மீது எந்தவித மனக் கசப்பும் எனக்கு கிடையாது. திமுகவும், தவெகவும் ஒரே அணியில் இணைய வேண்டும் என்று திருமாவளவன் கூறியது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. வட துருவமும், தென் துருவமும் எப்படி ஒன்று சேர முடியும்? தவெக அமைச்சரவையில் இருந்து கொண்டு திமுக உடன் நட்பு தொடரும் என்று, திருமாவளவன் கூறியது அதிர்ச்சியாக இருந்தது.

பக்க பலமாக இருப்பேன்
நோபல் பரிசு எனக் கூறியது திருமாவளவன் மனதை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். திருமாவளவன் பற்றிய எனது கருத்தால் விசிக எம்.பி.ரவிக்குமார் எனது சங்கொலி பத்திரிக்கை நிகழ்ச்சிக்கு வர முடியாது என தெரிவித்து விட்டார். திருமாவளவன் மீது எனக்கு கோபமோ, மனக் கசப்போ இல்லை, திருமாவளவனின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பேன்.
இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.