Also Watch
Read this

பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுக்களை தற்போதும் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பண மதிப்பிழப்பு அறிவிப்பு
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையை, பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது, நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கருப்பு பணம், ஊழல் உள்ளிட்டவற்றை ஒழிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி மேற்கொண்டார். இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட பிறகு, புதிதாக 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது.

ரூ.2000 நோட்டும் மதிப்பிழப்பு
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி முதல், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து, படிப்படியாக கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இதனை தொடர்ந்து, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, மொத்தம் 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டன.

98.47 சதவீதம் திரும்ப பெறப்பட்டது
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வரை இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் சுமார் 98.47 சதவீதம் ரிசர்வ் வங்கியிடம் திரும்ப வழங்கப்பட்டது. ஆனால், ரூ.5,400 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பொதுமக்கள் வசம் இருந்தது.

மீண்டும் அறிவிப்பு
இந்த 2,000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்து, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அறிவிப்பு வந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2,000 நோட்டுக்களை நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று எவ்வித சிரமமும் இன்றி மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேரடியாக வர முடியாதவர்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுக்களை தபால் மூலமாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்தால், அந்த நோட்டுகளுக்கான சரியான மதிப்பு அவர்கள் குறிப்பிடும் வங்கி கணக்கில், நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக, 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆர்.பி.ஐ. அறிவுறுத்தி உள்ளது.
