Also Watch
Read this
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க தேவையான நம்பரை பெறுவதில் கடந்த 5 நாட்களாக நடந்த இழுபறி ஒருவழியாக முடிவுரையை எட்டிய நிலையில், அதிமுகவில் சி.வி.சண்முகம் தலைமையில் நடந்த எம்எல்ஏக்களின் ரகசிய ஆலோசனை கூட்டம், அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

அதிமுக நிலைமை
இபிஎஸ் தலைமையேற்றது முதல் அதிமுகவிற்கு தொடர் தோல்விதான் எனவும், அவரது தலைமையின்கீழ் கட்சியில் இருக்க பெரும்பான்மையான ஏம்எல்ஏக்களுக்கு விருப்பமில்லை எனவும் முகத்தில் அறைந்தார்போல சி.வி.சண்முகம் காட்டமாக பேசியதாக கூறப்படும் நிலையில், அதிமுக உடையுமா? அல்லது தலைமை மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக குறித்து விவாதம்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், அந்த வெற்றியின் சூட்டோடு சூடாக தவெகவால் ஆட்சியமைக்க முடியாமல் தவித்த நிலைதான் உருவானது. ஒரு வழியாக ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 120 என்ற பலத்தை பெற்று ஒருபுறம் நொடிக்கு நொடி பரபரப்பை பற்ற வைத்த நிலையில், மறுபுறம் தமிழக அரசியல் களத்தில் அதிமுகவின் நகர்வுகளோ அதைவிட பெரும் விவாதத்தையே கிளப்பி உள்ளன.

சி.வி.சண்முகத்தின் செயல்பாடு
குதிரை பேரத்தை தடுப்பதற்காக கூவத்தூர் போன்று கடந்த 4 நாட்களாக இருபதுக்கும் அதிகமான அதிமுக எம்எல்ஏக்கள் புதுவை ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தவெகவுடன் இணைவது குறித்து விவாதித்ததாக தகவல் வெளியானது. அதேபோல், தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிமுகவின் தலைமைக்கும், எம்எல்ஏக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும் பேசப்பட்டது. இதனிடையே, புதுச்சேரியில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வந்ததும், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கவுள்ள கட்சிக்கு வாழ்த்துக்கள் என தனது எக்ஸ் தளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டார். இந்த பதிவை வெளியிட்ட சில மணி நேரங்களில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தனிப்பட்ட செயல்பாடுகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இபிஎஸ் மீது அதிருப்தி
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிமுகவின் முக்கிய தலைவர்களான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தவெகவுடன் இணையலாம் எனக் கூறியதாகவும் அதற்கு இபிஎஸ் அழுத்தமாக மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் செலவுகளுக்கு இபிஎஸ் ஒரு ரூபாயைகூட கண்ணில் காட்டவில்லை என்றும், தங்கள் கையிருப்பைதான் தேர்தல் நேரத்தில் செலவழித்ததாகவும், முக்கிய முடிவுகள் எடுப்பதில் இபிஎஸ் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அவர் மீது கட்சியில் உள்ளவர்களுக்கு கடும் அதிருப்தி இருந்தாகவும் சொல்லப்படும் நிலையில் தவெகவுடன் இணைவதற்கும் மறுப்பு தெரிவித்ததால் கூடுதல் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவசர ஆலோசனை
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இபிஎஸ் அவசர ஆலோசனை கூட்டம் நடத்த, அதிலும் தங்கள் அதிருப்தியை முகத்தில் அறைந்தார்போல் சி.வி.சண்முகம் நேருக்குநேர் கூறியதாக தெரிகிறது.. அதோடு, இபிஎஸ்ஸின் தன்னிச்சையான முடிவால்தான் 2019 முதல் தற்போதுவரை தொடர் தோல்விகளை சந்திப்பதாகவும், கூட்டணி யாருடன் வைப்பது என்பதைகூட சொதப்பும் ஒருவர் தலைமைக்கு சரியானவரா எனவும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

ரகசிய ஆலோசனை
இதனையடுத்து, எம்.ஆர்.சி. நகரில் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயகுமார், கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், மரகதம் குமரவேல், பழனி ரவி மோகன், இசக்கி சுப்பையா, காங்கேயம் நடராஜன், பெருந்துறை ஜெயக்குமார், சத்தியபாமா, சங்கரன்கோவில் திலீப், பாஸ்கர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் மாமியாரும், லால்குடி தொகுதியின் எம்எல்ஏவுமான லீமா ரோசும் பங்கேற்றார்.

சி.வி.சண்முகம் தலைமையில் நடந்த இந்த ரகசிய ஆலோசனை அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருப்பதை வெளிப்படையாக காட்டுவதாக அரசியல் வட்டாரம் கூறும் நிலையில் அவர்களை சமாதானபடுத்துவதற்காக தளவாய் சுந்தரம், ஆர்.பி.உதயகுமார், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் சென்றனர். அப்போது, அதிமுகவின் தொடர் தோல்விக்கு காரணமே இபிஎஸ்தான் என்றும் அதிமுகவை நம்பி வாக்களித்த மக்களுக்கும் அவர் துரோகம் செய்துவிட்டார் எனவும் சிவி சண்முகம் ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.

நல்ல செய்தி வரும்
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன், திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியை சந்தித்து பேசியதாகவும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தததாக சொல்லப்படுகிறது. மேலும், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் தொடரும் எண்ணம், பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்களிடம் இல்லையென காட்டமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. கை கொடுக்காத இந்த சமாதான படலத்திற்கு பிறகு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, பொறுமையாக இருங்கள் நல்ல செய்தி வரும் என்று கூறினர்.

கட்சி தாவல் தடை சட்டம் பாயுமா?
மீண்டும் அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்படுமோ? என்ற பதற்றம் ரத்தத்தின் ரத்தங்களுக்கே தொற்றி உள்ள நிலையில் ஆர்.பி.உதயகுமாராவது நல்ல செய்தி சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அதிமுக உடையுமா அல்லது தலைமை மாறுமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க 30க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் தவெக பக்கம் சாய்ந்தால் கட்சி தாவல் தடை சட்டம் பாயுமா? என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு, ஒரு கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பிரிந்து சென்றால் அவர்கள் மீது கட்சி தாவல் நடவடிக்கை பாயாது என்பதே சட்டத்திருத்தத்தின் பதிலாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved