Also Watch
Read this
தவெக நடத்திய கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் புறக்கணித்தது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும் நிலையில், அதன் பின்னணியில் உள்ள பகீர் காரணத்தை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

வெளியில் இருந்து ஆதரவு
தாமரை இலை தண்ணீர் போல தவெக ஆதரவு நிலைப்பாட்டில் பட்டும் படாமல் இருந்துவரும் இடதுசாரிகளுக்கு, தாமரை கட்சி மீதான முதல்வர் விஜயின் அணுகுமுறை சந்தேகத்தை கிளப்பியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் பனையூரை அதிர வைத்துள்ளது.

திமுக கூட்டணியில் ரத்தமும் சதையுமாக இருந்து வந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகான காலத்தின் கோலத்தால் தவெக அணிக்கு தாவுகின்ற சூழல் ஏற்பட்டது. முன்னே சென்ற காங்கிரஸ், பின்னே வந்த முஸ்லீம் லீக், உடன் வந்த விசிகவும் அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டு கூட்டணி அரசில் அங்கமாகிவிட்ட போதிலும், கம்யூனிஸ்டுகள் மட்டும் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தன.

மாமல்லபுரம் கூட்டத்தில்...
இந்நிலையில் தான், தவெக தலைவர் விஜய் தமது தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளித்த கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாமல்லபுரத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். ஆட்சியில் பங்கேற்றுள்ள காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் மற்றும் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தவெக சார்பில் நேரில் அழைப்பு விடப்பட்டிருந்தது.

மாமல்லபுரம் கூட்டத்தின் மூலம் தவெக கூட்டணியை இறுதி செய்து, அடுத்தடுத்து வரவுள்ள தேர்தல்களின் இணைந்து களமாடலாம் என தவெக தலைமை கணக்கு போட்டது. அதற்கு பெரும்பாலான கட்சிகளும் ஆதரவும் தெரிவித்து விட்டன. ஆனால், கம்யூனிஸ்ட்கள் மட்டும் பிடி கொடுக்காமல் தங்கள் நிலைப்பாட்டில் பிடிவாதமாகவே உள்ளனர். அதன் எதிரொலியாகவே தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டணி கட்சிக் கூட்டத்தை இரு கட்சிகளும் புறக்கணித்தன. இதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணம் ஒன்று மறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒன்றிய அரசு டூ மத்திய அரசு
என்ன தான் மையக்குழு கூட்டத்தின் மூலம் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், இன்னமும் இரு கட்சிகளிலும் நிர்வாகிகள் மட்டத்தில் அது தொடர்பான கருத்து வேறுபாடு நிலவுவதாக சொல்லப்படுகிறது. பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் தவெக உறுதியாக இல்லை என்றும், ஒன்றிய அரசு எனக் கூட சொல்ல முடியாமல் மீண்டும் மத்திய அரசு என்ற சொல்லாடலுக்கு தவெக மாறி விட்டதாகவும் சுட்டிக்காட்டி தலைமையிடம் செஞ்சட்டை தோழர்கள் பொருமுவதாக சொல்லப்படுகிறது.

தோழமை என்ற வட்டத்தில்...
ஒருவேளை இப்போதே நாம் கூட்டணியை உறுதி செய்துவிட்டால் பின்னாளில் தவெக அரசு பாஜக திட்டங்களை ஆமோதித்தாலோ, அமல்படுத்தினாலோ நாம் தான் பழியை சுமக்க வேண்டும் என முக்கிய தலைவர்கள் எச்சரித்ததாகவே தெரிகிறது. அதுமட்டுமின்றி, 2029ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையும் கணக்கில் கொண்டே பொறுமையாக இருக்க கம்யூனிஸ்ட்கள் முடிவு செய்துள்ளன.

மேலும், தவெக அரசின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்த்த பிறகு முடிவு செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே தான், தற்போதைக்கு கூட்டணி என்ற பேச்சுவார்த்தைக்குள் செல்லாமல் தோழமை என்ற வட்டத்தோடு தள்ளி நிற்க வேண்டும் என இரு கட்சிகளும் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

முதல்வர் விஜய் உடன் சந்திப்பு
அதுவரை மக்கள் சார்ந்த பிரச்னைகளில் கவனம் செலுத்தி வாய்ப்பு ஏற்பட்டால் திமுக உடனும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கவும் கம்யூனிஸ்ட்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனடிப்படையிலேயே இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர்களும் கூட்டத்தை மொத்தமாக புறக்கணித்துவிட்டால் அது திமுகவினருக்கு தீனி போட்டதை போல் ஆகிவிடும் என்பதால், முதலமைச்சர் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசியதோடு தங்கள் சார்பிலான கோரிக்கைகளையும் முன்வைத்துவிட்டு வந்திருப்பதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.