Also Watch
Read this
ஒரு தலைவன் சரியான முடிவை எடுக்காவிட்டால், அந்த இயக்கம் எப்படி போகும் என்பதற்கு உதாரணம் தான் அதிமுகவின் இன்றைய நிலை என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்து உள்ளார்.

தவெகவில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்...
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவெகவில் இணையும் விழா மாமல்லபுரத்தில் இன்று ஜூலை 2ஆம் தேதி நடைபெற்றது. இதில், தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள், தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடக்க உரை நிகழ்த்திய செங்கோட்டையன், அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இதையடுத்து, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கும் தவெக கட்சித் துண்டை அணிவித்து வரவேற்று, வாழ்த்து கூறினார். இவர்களுடன் சேர்ந்து தவெகவில் இணைந்தவர்களுக்கும், தவெக கட்சித் துண்டை அணிவித்து ஆனந்த் வரவேற்றார்.

ஒரு தலைமுறை மாற்றம்
தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது;
தீய சக்தி திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை தொடங்கியவர் எம்ஜிஆர். தவெகவை உருவாக்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்குக் கொண்டு வந்திருக்கிறார் விஜய். இது சாதாரண மாற்றம் அல்ல.

இது ஒரு தலைமுறை மாற்றம். எடப்பாடி பழனிசாமியை நாங்கள் எல்லாம் சேர்ந்து தான் அதிமுக பொதுச் செயலாளர் ஆக்கினோம். ஆனால், அவரது தவறான முடிவுகளால் அந்த இயக்கம் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. உண்மையை எடுத்துச் சொல்பவர்களை அவர் துரோகி என்கிறார்.

யார் துரோகி? நான், 42 ஆண்டுகள் அரசியலில் இருந்தவன். கரூரில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நான் வெற்றி பெற்றவன். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் தவெகவில் இணைந்து உள்ளோம்.

கரூருக்கு வாருங்கள்...
ஒரு தலைவன் சரியான முடிவை எடுக்காவிட்டால், அந்த இயக்கம் எப்படி போகும் என்பதற்கு உதாரணம் தான் அதிமுகவின் இன்றைய நிலை. அடிமட்டத் தொண்டர்களின் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் விஜய் இன்னும் சில தினங்களில் கரூர் வர உள்ளார். கரூர் நிகழ்ச்சியில், இன்னும் அதிக அளவில் தொண்டர்கள் தவெகவில் இணைவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.