Also Watch
Read this
By: Web Team

பாரத் ராஷ்ட்ரிய சமிதியான பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அவர், கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
ஐதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா, கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்வதாகவும், எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார்.
மேலும், கவிதா கூறியதாவது:
கடந்த 2024, நவம்பர் 23ஆம் தேதி சிறையில் இருந்து நான் விடுவிக்கப்பட்ட பிறகு, கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டேன். வட்டமேஜை மாநாடு, போராட்டங்கள், பெண்களுக்கான இடஒதுக்கீடு என ஏராளமான பணிகளை மேற்கொண்டேன். இவை அனைத்தும் கட்சி விரோத நடவடிக்கைகளா?
எனது குடும்பத்தை சிதைக்க, பிஆர்எஸ் கட்சியை கைப்பற்ற சதி நடக்கிறது. அதன் முதல் அத்தியாயமாக தான் என்னை இடைநீக்கம் செய்தனர்.
எனது தந்தை கே.சந்திரசேகர ராவ் மற்றும் சகோதரர் கே.டி.ராமாராவ் ஆகியோருக்கும் இதேபோன்ற அச்சுறுத்தல் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும், நானும் எனது தந்தையும் எனது சகோதரரும் ஒன்றாக இருப்போம்.
எனது உறவினரும் கட்சியின் முக்கிய நபராக இருப்பவருமான முன்னாள் அமைச்சர் ஹரிஷ் ராவ் தான் இவை அனைத்துக்கும் பின்னால் இருக்கிறார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்தபோது ஹரிஷ் ராவ், அவரிடம் சரணடைந்தார். அதன்பிறகு தான் இவை அனைத்தும் தொடங்கியது.
இந்த சந்திப்புக்கு பிறகு, ஹரிஷ் ராவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் கைவிட்டது. காலேஸ்வரம் திட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேட்டில் எனது தந்தைக்கு தொடர்பு இருப்பதாகக் காங்கிரஸ் கூறியபோது ஹரிஷ் ராவ் ஏன் அமைதியாக இருந்தார்?.
நான் வேறு ஒரு கட்சியில் சேரப் போவதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுக்கிறேன். எனது அரசியல் எதிர்காலம் குறித்து வரும் நாட்களில் முடிவுகளை எடுப்பேன்.
இவ்வாறு கவிதா கூறினார்.