Also Watch
Read this
அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருப்பதாக முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 10 லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்துவிட்டு கஜானாவை துடைத்து சென்றதாகக் கூறி, வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீர்கள் என்றும் பதிவிட்டு உள்ளார்.
அறிவுப்புகளை வரவேற்கிறேன்
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-க்கு மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளை வரவேற்கிறேன்.

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே...
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீர்கள். மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.ஐந்து ஆண்டுகளாக, கொரோனா, வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சு தான் நாங்க எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 10 லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி உள்ளீர்கள். அ னுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
திசை திருப்பாதீங்க...
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவா சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகு தானே நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க.

மீண்டும் எனது வாழ்த்துக்கள்
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved