Also Watch
Read this
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரண்டாவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு பிரச்சனை உள்ளிட்டவற்றை விவாதிக்கக்கோரி முழக்கமிட்டதால் மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்திற்கு இரண்டாவது நாளாக பச்சை துண்டு அணிந்து வந்த திமுக எம்.பி.க்கள், மேகதாது அணை விவகாரம் குறித்து கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வலியுறுத்தி, அமளியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று ஜூலை 21ஆம் தேதி, காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது. முதலில் கேள்வி நேரம் தொடங்கியது.

ஆனால், டில்லி போராட்ட வன்முறைக்கு கண்டனம், மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, முதலில் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.

தொடர்ந்து அமளி, குழப்பம்
நண்பகல் 12 மணிக்கு சந்தியா ராய் தலைமையில் அவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக, அவையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

காங்.தலைவர் கார்கேவுக்கு வாழ்த்து
மாநிலங்களவை அதன் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் காலை 11 மணிக்குக் கூடியது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்த நாளை முன்னிட்டு, சி.பி.ராதாகிருஷ்ணன் கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

"நமது நாட்டின் அரசியல் சாசனம், ஜனநாயகம், ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீது நமது இளம் தலைவர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்க, உங்கள் தலைமை மிகச்சிறந்த முன் உதாரணமாக இருந்து வழிகாட்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அவையில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, மல்லிகார்ஜுன கார்கே எழுந்து நின்று சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும், உறுப்பினர்களுக்கும் கைகளைக் கூப்பி நன்றி தெரிவித்தார்.

மாநிலங்களவை ஒத்திவைப்பு
இதை தொடர்ந்து, கார்கே பேசுவதற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் அனுமதி அளித்தார். டெல்லியில் நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தொடர்பாக பேசிய கார்கே, “வினாத்தாள் கசிவு, நீட் தேர்வை எதிர்த்து நமது மாணவர்கள் குரல் கொடுத்ததற்காக தாக்கப்பட்டனர். கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. மருத்துவமனைகளில் பலர் உள்ளனர். இந்த விவகாரம் குறித்து பேசப்பட வேண்டும்” என்றார். இதனை தொடர்ந்து, அமளி காரணமாக அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்தார். அவை மீண்டும் 12 மணிக்கு கூடியபோதும், மீண்டும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved