Also Watch
Read this
டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்து உள்ளார். போராட்டத்தில் ஈடுபடுவோரின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார்.

நீட் தேர்வை அறவே ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ள முதலமைச்சர் விஜய், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதே பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும் கூறி உள்ளார்.

ராகுல்காந்தி கைது, கண்டிப்பு
இதுதொடர்பாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் கூறி இருப்பதாவது;
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து, டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது.

ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

நீட் தேர்வுமுறை வேண்டாம்
நீட் தேர்வைப் பொறுத்தவரை, நீட் தேர்வு முறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் தரமாட்டோம்.

நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டும் எனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.

மாநில அரசுக்கு அதிகாரம்
ஒருவேளை, இதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

இதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை.

ஒரே தீர்வு...
இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம். நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். இதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்த சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தெரிவித்துள்ளார்.