Also Watch
Read this
தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கு விசாரணைக்காக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டு உள்ளது. கரூரில் உள்ள வீட்டில் செந்தில் பாலாஜியின் தந்தையிடம், காவல்துறையினர் நேரில் வழங்கினர்.

தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாகவும், சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் இதற்காக 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக கூறி கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சென்னை அருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஐபிடிஎஸ் என்ற பெயரில் கருத்துக்கணிப்பு வெளியிடும் நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நரேஷ், கரூர் மாவட்டத்தைச் சார்ந்த கார்த்திக், ரமேஷ் மற்றும் சென்னையை சேர்ந்த செல்வன், சீனிவாசன், ராஜேஷ், தியாகராஜன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

முதல் தகவல் அறிக்கையில்...
காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின்படி(FIR), கைதான நபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வி.அசோக் குமார் ஆகியோரின் பெயர்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக, காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக 8 தனிப்படைகள் அமைத்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கரூர், கோவை, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட
பகுதிகளில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தீவிர தேடுதல் வேட்டை
குறிப்பாக, திருச்சி மற்றும் சென்னை தனிப்படை போலீசார் கரூரில், அசோக் குமார் பூர்வீக வீடு, தற்போது தங்கியுள்ள வீடு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு தங்கும் விடுதிகள், அவர் அதிகமாக செல்லும் இடங்களுக்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு, தேடி வருகின்றனர். இந்த நிலையில், அசோக் குமார் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வழக்கை 6ஆம் தேதிக்கு மாற்றி, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு சம்மன்
இந்த நிலையில், மண்மங்கலம் தாலுகாவில் உள்ள ராமேஸ்வர பட்டி கிராமத்தில் அமைந்துள்ள செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் பூர்வீக வீட்டில் பெற்றோரிடம் சென்னை போலீசார் சம்மன் வழங்கினர். செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் வழங்கி உள்ளனர்.