Also Watch
Read this
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

குட்கா வழக்கு
தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்பட 26 பேருக்கு எதிராக, சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சிறப்பு நீதிமன்றத்தில் மனு
இந்த வழக்கின், விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்காதவர்கள் பலர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளதால், அவர்களை சிபிஐ தரப்பு சாட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களின் நகல்களை வழங்க உத்தரவிட வேண்டும் என, குற்றம் சாட்டப்பட்டுள்ள சென்னை காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜார்ஜ் தரப்பில் மனு செய்யப்பட்டது.

மனு தள்ளுபடி
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, குட்கா முறைகேடு வழக்கில் 278 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சில சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யபடவில்லை. பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் மனுதாரருக்கு ஏற்கெனவே வழங்கபட்டு விட்டதால், மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த தவறும் இல்லை எனக் கூறி, முன்னாள் ஆணையர் ஜார்ஜின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

12 வாரங்களுக்குள்...
மேலும், குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டு உள்ளார்.