Also Watch
Read this
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், ஜூன் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம் வழங்கப்படும் என்றும், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக ஆண்டுக்கு 755 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

"தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்"
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;
தமிழ்நாடு முதல்வரின் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு, தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதில் மிகவும் முக்கியமான திட்டம் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்”. அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் பிரசவித்த தாயையும் கவுரவிக்கும் முகமாக “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” வடிவமைக்கப்பட்டு இன்று, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தாய் சேய் நலக்குறியீடு
தமிழ்நாடு அரசு தாய் - சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவை, அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையை திட்டமிடும் முறை மற்றும் கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இம்முயற்சிகள் மாநிலத்தில் தாய் சேய் நலக் குறியீடுகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தி உள்ளன.

ஒரு கிராம் தங்க மோதிரம்
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். தமிழர் பாரம்பரியத்தில், “தாய்மாமன் சீர்” என்ற மரபின்படி, தமிழ்நாடு முதலமைச்சர், தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

ரூ.755.83 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவுகூரும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் துவக்கி வைக்கிறார்
இந்த திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறுவார்கள். “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று முதல்வர் விஜய் துவக்கி வைப்பார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.