Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரானின் எண்ணெய் உற்பத்தி, விற்பனைக்கு பொது உரிமம் :
அமெரிக்கா-ஈரான் இடையே சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ஹார்முஸ் நீரிணையில் தடையற்ற மற்றும் சுதந்திரமான போக்குவரத்தை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்(( Scott Bessent)) தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக ஈரானின் எண்ணெய் உற்பத்தி, மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கும் வகையில் 60 நாட்கள் செல்லுபடியாகும் பொது உரிமத்தையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
மாஸ்கோவின் 4 விமான நிலையங்களை மூடிய ரஷ்யா :
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி சுமார் 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 59 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறிய நிலையில், மாஸ்கோவின் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, உக்ரைனின் தெற்கு ஒடெசா பிராந்தியத்தின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் முன்று பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்திய வம்சாவளியைச் சேந்த அபர்ணா ராஜ் வெற்றி :

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி. மேயர் தேர்தலுக்கான உட்கட்சி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேந்த 32வயது பெண் வெற்றி பெற்றார். வாஷிங்டன் டிசி மேயர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு மேயர் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் குடியரசுக் கட்சி சார்பில் ஸ்டாசியா ஹால் என்பவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஐந்து வேட்பாளர்களுக்கு இடையிலான கடும் போட்டியில் 32 வயதான அபர்ணா ராஜ் வெற்றி பெற்றார்.
ராஸ் லஃபான் தொழிற்சாலையில் வெடி விபத்து - 13 பேர் பலி :

கத்தார் நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய ராஸ் லஃபான் (Ras Laffan) திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி தொழிற்சாலையில்,தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதில் இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 66 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் தாக்குதல் காரணமாக ஆலை மூடப்பட்டிருந்த நிலையில், ஆலையில் மீண்டும் உற்பத்தி பணிகள் தொடங்குவதற்கு முன்பே வெடி விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.