Also Watch
Read this
By: Manigandan Raja
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் புதிதாக கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வுதியம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 2 லட்சம் வீடுகள் உருவாகியுள்ள நிலையில் ரூ.3,500 கோடியில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். கிராமப்புற ஊரக சாலைகளை மேம்படுத்தும் பொருட்டு ரூ.1,088 கோடியில் 2,200 கிமீ கிராம சாலைகள் மேம்படுத்தப்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைம்பெண்கள், விவசாயிகள், ஆதரவற்ற பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 1.80 லட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.

முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்
சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2,000ல் இருந்து ரூ.3,400 ஆகவும் பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும். சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உயிரிழந்தால், குடும்பத்திற்கு ரூ.1,200 ஓய்வூதியம் வழங்கப்படும். தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.2,000ல் இருந்து ரூ.3,000 ஆகவும் பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.50,000லிருந்து ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும். இவர்களில் உயிரிழப்பு ஏற்பட்டால் குடும்ப ஓய்வூதியம் ரூ.1,100 வழங்கப்படும்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, அவர்கள் கோரிய விடுமுறை கால மே மாத ஊதியம் ஆகியவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் அடுத்த கோரிக்கையான நிரந்தர பணி நியமனத்தை பொருத்தவரை ஓர் அறிவிப்பை நான் வெளியிடுகிறேன். அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் அவர்களின் பணிக் காலத்தை அடிப்டையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். இதனடிப்படையில் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இதற்கான ஆணை விரைவில் வெளியிடப்படும்.

திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்
கடந்த 5 ஆண்டுகால வளர்ச்சியைப் பார்த்து அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
என்னைவிட தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு கூடுதல் நம்பிக்கை இருக்கிறது. உறுதியாக சொல்கிறேன் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்.
இவ்வாறு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved