Also Watch
Read this
காவிரி நீர் உரிமையை பாதுகாக்கவும், மேகதாது திட்டத்தை தடுக்கவும் தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தவெக அரசு உறுதி தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டிற்கு உரிய நேரத்தில் காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்ய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

ஆளுநர் உரையின் தமிழாக்கம்...
தமிழகத்தின் 17ஆவது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது, இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார்.
அதற்கும் பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார். அப்போது அவர் பேசியதாவது;

அண்ணா, எம்ஜிஆர் வழியில்...
அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர்.வழியில் ஜனநாயகத்தின் மேன்மையை மேம்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு நடைமுறைப்படுத்தும். ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய உரிய நிதிப் பகிர்வினைக் கோருவதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும்.
அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுவதோடு மட்டும் நின்றுவிடாமல், உச்ச நீதிமன்றம் வரை சென்று நிதிப் பகிர்வினை சட்டரீதியாகப் பெறுவதற்காக சட்ட வல்லுநர் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும்.

நியாயமான நிதிப்பகிர்வு
தமிழ்நாட்டிற்குரிய நியாயமான நிதிப் பகிர்வை ஒன்றிய அரசிடமிருந்து பெறுவது உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாப்பதற்கும், மாநில உரிமைகளுக்காகப் போராடுவதற்கும், மாநிலங்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், புதிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, பெரும் முனைப்புடன் இந்த அரசு செயல்படும்.

அதிகபட்ச தண்டனை
பொது அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டத்தின் ஆட்சியினை நிலை நிறுத்துவது மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, மகளிர் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இந்த அரசின் முதன்மையான லட்சியம். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது இந்த அரசு மிகக் கடுமையான, கண்டிப்பான, விரைவான நடவடிக்கை எடுத்து, உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரும்.

இரும்புக் கரம் கொண்டு...
மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை திறம்படவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் நீடித்த காலத்திற்குப் பயன்படுத்தப்படுவதையும் இந்த அரசு உறுதி செய்யும். அரசின் கருவூலத்திற்கு வரவேண்டிய வருவாய் வேறு வழிகளில் திசை மாறிச் செல்வதைத் தடுத்து, அது முறையாக வந்து சேருவதை உறுதி செய்வதற்காக, முறையான ஒழுங்குமுறை மற்றும் திட்டமிட்ட சட்ட விரோத கனிமத் தொழிலும், வரி ஏய்ப்பும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
கனிமங்கள் மூலமாக கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்க அரசு தீவிரமாக முயன்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது. தமிழகத்தில் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடியை எட்டி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் இரு மடங்காக உயர்ந்து உள்ளது. நிதிப்பற்றாக்குறை இருந்தாலும், இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved