Also Watch
Read this
காவிரி நீரைத் திறந்து விட முடியாது என்றும், நீர் வேண்டும் என தமிழக அரசு கேட்கவில்லை என்றும், கர்நாடக அமைச்சர் பேசி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறி உள்ளார். கர்நாடக அமைச்சரின் பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

கர்நாடக அமைச்சர் பேச்சு
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
’கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரை திறந்து விட முடியாது, நீர் வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்று கர்நாடக நீர்ப் பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்த பேச்சுக்கு என்ன பதில் வைத்து உள்ளார்?

மேட்டூர் அணையில் நீர் திறக்கவில்லை
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், கடந்த ஐந்து ஆண்டு முழுவதும், மிகச் சரியாக ஜூன் 12ஆம் தேதி அன்று, மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இன்று வரை, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கவில்லை. மேகதாது அணை கட்டும் கர்நாடக மாநிலத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் ஒன்றாக சென்று, ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தேன்.

முதல்வர் கேட்டுப் பெற வேண்டும்
காவிரி மேலாண்மை வாரிய தீர்ப்பின்படி, ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.91 டிஎம்சி நீரை கர்நாடக மாநிலம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதல்வர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடக மாநிலம் தர மறுக்கிறது. ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடக மாநிலத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய நீரை முதல்வர் கேட்டுப் பெற வேண்டும்.

கவனம் வேண்டும்
எம்எல்ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடக மாநிலத்திடம் இருந்து நமக்கு வர வேண்டிய நீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.