Also Watch
Read this
By: Manigandan Raja

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரத்தூர் மேட்டு காலனியில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென நில அளவை செய்ததால், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. வானுயர்ந்த ஆயிரக்கணக்கான பனை மரங்களும், தென்னை மரங்களும் சூழ்ந்து, ஒரு அழகான சோலைவனம் போலக் காட்சி அளிக்கும் இப்பகுதியில், 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து
வருகின்றனர். இவர்களில் பலருக்கு அரசு வழங்கிய பட்டாக்களும் உள்ளன.
ஒரத்தூர் நீர்த்தேக்கத் திட்டத்திற்காக நிலத்தை இழந்தவர்கள் தொடர்ந்த வழக்கின் காரணமாக, அதிகாரிகள் இந்த நில அளவையை மேற்கொண்டுள்ளனர். இதனால், தங்களின் வாழ்வாதாரமாகத் திகழும் இந்தச் சோலைவனமும், வீடுகளும் எப்போது வேண்டுமானாலும் அகற்றப்படலாம் என்று மக்கள் கண்ணீருடன் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து குன்றத்தூர் வட்டாட்சியர் கூறுகையில், "நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அறிக்கை சமர்ப்பிக்கவே இந்த அளவீடு செய்யப்படுகிறது. உடனடியாக ஆக்கிரமிப்புகள் எதுவும் அகற்றப்படாது, பொதுமக்களுக்கு பாதிப்பு வராது" என்று உறுதியளித்துள்ளார்.
இருப்பினும், தங்களின் வாழ்விட உரிமைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை ஒரத்தூர் மக்கள் அச்சத்துடனேயே நாட்களை நகர்த்தி வருகின்றனர்.