Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தகவல் :
ரஷ்யாவும், உக்ரைனும் மூன்று நாள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரடியாக தொடர்பு கொண்டு போரை தற்காலிகமாக நிறுத்துமாறு தான் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்ததாக தமது ட்ரூத் சோஷியல் வலைதள பக்கத்தில் அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
அவ்விரு தலைவர்களுக்கும் தமது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், இது போர் முடிவுக்கான தொடக்கத்தை குறிக்கும் நடவடிக்கையாக தாம் கருதுவதாக கூறியுள்ளார்.

ஈரானுக்கு எதிராக மீண்டும் ப்ராஜெக்ட் ஃப்ரீடம் திட்டம் :
பேச்சுவார்த்தை பலன் தராவிட்டால், ஈரானுக்கு எதிராக 'புராஜெக்ட் ஃப்ரீடம்' திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும், அதுவும் 'பிளஸ்' என்ற பெயரில் இன்னும் அதிரடியாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானுடன் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், தாங்கள் மீண்டும் பழைய பாதைக்கே திரும்புவோம் என கூறினார். புராஜெக்ட் ஃப்ரீடம் திட்டம் நல்லதுதான் என்றவர், அதைவிடச் சிறந்த வழிகளும் தங்களிடம் உள்ளதாகவும், ஒருவேளை தாங்கள் அந்த திட்டத்தை மீண்டும் தொடங்கினால், அது, 'புராஜெக்ட் ஃப்ரீடம் பிளஸ் ஆக இருக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஹார்முஸ் நீரிணையில் சிறு கப்பல்கள் கூட்டம் :
ஈரானின் ‘கொசுப் படை’ என்றழைக்கப்படும் சிறு கப்பல்கள் கூட்டம் ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் தனது திறனை ஆரம்பித்துள்ளது. ஈரானின் கடற்படையில் உள்ள பெரிய கப்பல்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா கூறும் நிலையில், சிறிய, அதிவேகத் தாக்குதல் படகுகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளது. ‘கொசுப் படை’ என்றழைக்கப்படும் இந்த சிறு கப்பல்களுக்கு, தாக்கும்திறன் அதிகம் உண்டு என்று கூறப்படுகிறது.
அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் வெற்றிகரமாக அகற்றம் :

வெனிசுலாவில் எஞ்சியிருந்த அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் அனைத்தும், வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக அமெரிக்க எரிசக்தி துறையின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு அமைப்பான NNSA அறிவித்துள்ளது.
வெனிசுலாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, சர்வதேச அணு ஆற்றல் முகமை, பிரிட்டன் அணுசக்தி நிபுணர்கள் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்க மண்ணில் அணு ஆயுத பாதுகாப்பு அச்சுறுத்தலை குறைக்கும் முயற்சிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால் வேதனை பட வேண்டியிருக்கும் :
இன்றிரவிற்குள் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடமிருந்து பதில் வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தம் எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரும் என்றும்.
ஈரான் வேண்டுமென்றே அமைதி ஒப்பந்தத்தை தாமதம் செய்வதாகவும், ஆனால் அதற்கான பதில் விரைவில் தெரிந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிறைய வேதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved