Also Watch
Read this
By: Manigandan Raja
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் முடிவுரைக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவட்டதாக மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் சூளுரைத்த பிரதமர் மோடி, இதுவரை திமுக நடத்திக் கொண்டிருந்தது கரப்ஷன்,மாஃபியா, கிரைம் ஆட்சி என சாடினார். மேலும், தமிழ்நாட்டில் பாஜக-என்.டி.ஏ. ஆட்சி அமையவே மக்கள் விரும்புவதாகவும் பிரதமர் கூறியிருக்கிறார்.

என்டிஏ பொதுக்கூட்டம்
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. கூட்டணி கட்சித்தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர் மேடையில் வைக்கப்பட்டு மோடி ஒருபுறமும் இபிஎஸ் மறுபுறமும் என பெரிய அளவிலான புகைப்படமும் அதையொட்டி சின்னங்களும் இடம்பெற்றிருந்தன. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை மையப்படுத்தி மேடையும், டெல்லி செங்கோட்டையை மையப்படுத்தி முகப்பு பகுதியும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

குவிந்த தொண்டர்கள்
பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தொண்டர்கள் சாரை சாரையாக குவிந்து வந்தனர். கூட்டரங்கு நிரம்பி வழிந்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து சென்னை விமான நிலையம் வந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்றடைந்தார். அவரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அன்புமணி, டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். மேடைக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு கூடியிருந்த தொண்டர்களை கண்டு ஆரவாரமாக கையசைத்தார். பதிலுக்கு பாஜக தொண்டர்களும் கட்சி துண்டுகளை சுழற்றி பிரதமருக்கு வரவேற்பளித்தனர்.
வணக்கம்... இபிஎஸ், டிடிவி
முன்னதாக, சுமார் 9 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக ஒரே மேடையேறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டு கைகுலுக்கியதால் தொண்டர்கள் உற்சாக மிகுதியில் முழக்கமிட்டனர்.

பிரதமர் மோடிக்கு முருகன் சிலை
பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பிரதமரின் வருகையால் சூரியன் மறைந்துவிட்டதாகவும் திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றுவதை தடுத்த திமுக அரசுக்கு முடிவு கட்டப்படுவது 100 சதவீதம் உறுதி எனவும் சூளுரைத்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி சால்வை மற்றும் மாலை அணிவித்து திருப்பரங்குன்றம் முருகன் சிலையை நினைவுப்பரிசாக வழங்கினார். அவரை பின்பற்றி, மற்ற கூட்டணி கட்சித் தலைவர்களும் பிரதமருக்கு மரியாதை செலுத்தினர்.

அண்ணன் எடப்பாடி...
இந்நிகழ்ச்சியில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என விளித்ததோடு, அவரை முழுமனதாக ஏற்றுக்கொண்டுதான் இந்த கூட்டணியில் இணைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தங்களுக்குள் இருந்த பங்காளிச் சண்டை முடிந்துவிட்டதாகவும் கூறியதால் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
கூட்டம் ஒரு தொடக்கம்
திமுக ஆட்சியின் முடிவுக்கு இந்த கூட்டம் ஒரு தொடக்கம் எனக்கூறிய பாமக தலைவர் அன்புமணி, இன்னும் இரண்டே மாதத்தில் இபிஎஸ் முதலமைச்சராவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். திமுக அரசு 6 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஜீரோ கவெர்மெண்ட் ஜீரோ கவர்னென்ஸ் நடைபெறுவதாகவும் சாடினார்.

ஜெயலலிதா ஆட்சியை புகழ்ந்த மோடி
வழக்கம் போல் தமிழில் பேசி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, தமிழகத்தில் பாஜக, என்.டி.ஏ. ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புவதாக தெரிவித்தார். திமுக ஆட்சியில் ஜனநாயகமும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை என்ற பிரதமர் மோடி, திமுகவினர் அந்தக் கட்சியில் வளர வேண்டும் என்றால், ஆமாம் சாமி போட வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஆட்சி நடைபெறுவதாக சாடிய அவர், நம்பிக்கை துரோகம் இழைத்த மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழகம் துடிப்பதாகவும் திமுக ஆட்சியில் ஊழல் மலிந்திருப்பதை குழந்தையும் அறியும் என்றும் விமர்சித்தார். மேலும், ஜெயலலிதாவின் முந்தைய கால ஆட்சியை புகழ்ந்து மோடி பேசியதும் அதிமுக தொண்டர்கள் படு உற்சாகமடைந்தனர்.
நன்றி கூறி, நெகிழ்ச்சி
தமிழகத்தில் சிஎம்சி எனப்படும் கரப்சன், மாபியா, கிரைம் ஆட்சி நடைபெறுவதாக கடுமையாக சாடிய பிரதமர் மோடி, திமுகவின் முடிவுரைக்கு கவுன்ட்டவுன் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார். முருகனுக்கு தீபமேற்றுவதை திமுக கூட்டணி விவாதப் பொருளாக மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், வாக்கு வங்கியை குஷிப்படுத்த நீதிமன்றத்தைக்கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை என்றும் விமர்சித்தார்.

பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது சிறுமி ஒருவர் பிரதமர் மோடியின் தாயாருடைய புகைப்படத்தை ஏந்திக்கொண்டிருந்ததை கவனித்த அவர், அச்சிறுமிக்கு நன்றி கூறி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved