Also Watch
Read this
By: Manigandan Raja
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகளை, காவல் நிலைய வாசலிலேயே வைத்து பெற்றோர் குண்டுக்கட்டாக தூக்கி கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விரும்பிய காதலனுடன் சேர்த்து வைக்க மறுத்து, சினிமா பட வில்லன் பாணியில் தோளில் தூக்கி போட்டு குடும்பமே சேர்ந்து இளம் பெண்ணை கடத்திச் சென்ற வீடியோவும் வெளியாகி பதற வைத்துள்ளது.
நான்கு வருட காதல்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த உச்சிமலைகுப்பத்தை சேர்ந்த மதன்குமார் என்பவரும், இறையூரை சேர்ந்த ஆனந்தி என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சமாதானம் செய்து பார்த்தும் பெண் வீட்டில் கேட்காத சூழலில், வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால், திருமணம் செய்து கொள்ளலாம் என யோசித்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

காரை மறித்த உறவினர்கள்
கடந்த 21ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், நண்பர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், ஆனந்தியின் தந்தை பாச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போலீஸ், மதன்குமார் - ஆனந்தியை தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வரவழைத்ததாக சொல்லப் படுகிறது. பாதுகாப்பு கொடுப்பதாக உறுதி அளித்து போலீஸ் வர சொன்ன நிலையில், காதல் ஜோடியும் காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறது. இருவரும் காவல் நிலையம் வருவது அறிந்த ஆனந்தியின் குடும்பத்தினர் தயாராக காவல் நிலையம் முன்பே காரில் காத்திருந்தனர். ஆனந்தி வந்த கார் சாலையில் இருந்து காவல் நிலையம் நோக்கி செல்ல நடு வழியிலேயே காரை மறித்த உறவினர்கள், காருக்குள் இருந்த ஆனந்தியை வலுக்கட்டாயமாக
இழுத்துச் சென்றனர்.
ஒரே ஒரு போலீஸ்காரர்
ஆனந்தியை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு வில்லன்கள் போல சிவப்பு நிற காருக்கு கொண்டு சென்றனர். காதலன் மதன்குமாரை தள்ளி விட்டு விட்டு ஆனந்தியை தூக்கி சென்ற குடும்பத்தினர் எப்படியாவது போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பிக்க பார்த்தனர். அதற்குள்ளாக அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் போலீஸில் தகவல் சொல்ல, காவல் நிலையத்தில் ஒரே ஒரு எஸ்.எஸ்.ஐ. மட்டும் தான் இருந்தார். அவரும் அவசர அவசரமாக ஓடிச் சென்று ஆனந்தியை கடத்திய குடும்பத்தினரை தடுத்து நிறுத்தி பார்த்தார். போலீஸ் வந்து நின்றும் கூட ஆனந்தியை காருக்குள் பிடித்து தள்ளிய குடும்பத்தினர், பின்னர் பைக்கில் ஏற்றிக் கொண்டு செல்ல முயன்றனர். ஒரே ஒரு போலீஸ் அந்த கூட்டத்தை சமாளித்து காவல் நிலையம் அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

காவல் நிலைய வாசலே களேபர கோலமாக...
பேச்சுவார்த்தையின் போது ஆனந்தியின் தாய், தந்தை இருவரும் காலில் விழுந்து கெஞ்சி கதறிய நிலையில், கண்ணீரில் மனம் மாறிய ஆனந்தி, தாய், தந்தையுடன் செல்வதாக கூறவே கடைசியில் காதல் ஜோடி பிரியும் நிலை ஏற்பட்டது. பெற்றோர் சிந்திய கண்ணீரில் காதலை மறந்த ஆனந்தி, தாய், தந்தையுடன் வீட்டுக்கு செல்வதாக கூற, இனிமேல் ஆனந்தியை தொந்தரவு செய்யக் கூடாது எனக் குறிப்பிட்டு காதலனிடம் கடிதம் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் கொஞ்ச நேரத்தில் காவல் நிலைய வாசலே களேபர கோலமாக காட்சியளித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved