திமுகவின் கோட்டையாக உள்ள கம்பம் சட்டமன்ற தொகுதியில் வரும் 2026 தேர்தலில் 4 முனை போட்டி நிலவும் எனவும், அதிலும் மண்ணின் மைந்தரான ஒருவர் நின்று களமாடுவார் என்றும் கூறப்படுகிறது. இளைஞர்களும், இளம்பெண்களும் ஒருபக்கம் த.வெ.க.விற்கு வாக்குகளை செலுத்தி மொத்த வாக்குகளை கணிசமாக பிரிப்பார்கள் என்ற பேச்சு அடிபடும் நிலையில், திமுக தனது கோட்டையை தக்க வைக்குமா? அல்லது தாரை வாக்குமா? என்பதுபெரும் புதிராகவே உள்ளது.கம்பத்தில் யார் கொடி பறக்கும்?தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு தனி கிராக்கி உள்ளது. தமிழக, கேரள எல்லையை உள்ளடக்கிய இந்த தொகுதியில் 80 சதவீதத்தினர் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். மீதமுள்ளோர் தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர். 1957ல் சட்டமன்ற தொகுதியாக நிறுவப்பட்ட கம்பத்தில் வி.எஸ்.மணி காங்கிரஸ் எம்எல்ஏ ஆக இருந்தார். தொடர்ந்து 1962லும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரே சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இதையடுத்து 1967ல் கம்பம் தொகுதி திமுக வசம் சென்றது. அடுத்து, 1971, 1989, 2006, 2011, 2021 என தொடர்ந்து வெற்றியை எட்டிப்பிடிக்க திமுகவின் கோட்டையாக மாறியது கம்பம் தொகுதி. இதனிடையே 1977, 1980, 2001, 2016ஆம் ஆண்டுகளில் அதிமுகவினரும் தங்கள் பலத்தை நிரூபித்து காட்டினர். இந்நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கம்பத்தில் யார் கொடி பறக்கும்? என்பதற்கான போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கம்பம் ராமகிருஷ்ணன் VS எஸ்.டி.கே.ஜக்கையன்தங்கள் பகுதிக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கவில்லை, ஏதாவது பிரச்சனை என்றால் ஓடி வரவரவில்லை என்ற காரணங்களை முன்வைத்து தொகுதியின் பெருவாரியான மக்கள் சிட்டிங் எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், திமுக சார்பில் அவரைவிட்டால் வேறு யாரும் நிற்கமாட்டார்கள் என்ற பேச்சும் அடிபடுகிறது. அதேநேரம், சிறுபான்மையினர் வாக்குகள் தனக்குதான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் ராமகிருஷ்ணன். அதேபோல், அதிமுக சார்பில் கட்சியின் மூத்த நிர்வாகியான எஸ்.டி.கே.ஜக்கையன் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் உள்ளதால் தொகுதியில் உள்ள சிறுபான்மையினர் எஸ்.டி.கே.ஜக்கையனுக்கு வாக்களிப்பார்களா? என்பது சந்தேகம்தான். அதேநேரம், கம்பம் ராமகிருஷ்ணன் தனது மகன் வசந்தனுக்கு சீட்டு கேட்கலாம் என்றும் எஸ்.டி.கே.ஜக்கையன் அவரது மகன் மணிமாறனுக்கு சீட்டு கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது. மண்ணின் மைந்தனாய் உலா வரும் ஜெகநாத் மிஸ்ராஇதுஒருபுறமிருக்க, சமூக சேவகர் என்றபெயரில் தொகுதியில் பம்பரமாய் சுழலும் ஜெகநாத் மிஸ்ரா கூட்டணி அமைத்தோ அல்லது தனித்தோ களமிறங்கப்போவதாகவும் வெற்றி தனக்குதான் என்றும் நிகழ்ச்சி ஒன்றில் பேசி தற்போதைய எம்எல்ஏக்களுக்கும் முன்னாள் எம்எல்ஏக்களுக்கும் கிலியை கிளப்பி உள்ளார். திமுக, அதிமுகவினரை எதிர்க்கும் அளவுக்கு ஜெகநாத் மிஸ்ராவின் நமது மக்கள் முன்னற்ற கழகம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய கட்சியா? அல்லது அவர்தான் பெரிய அரசியல் தலைவரா? அவரை பார்த்து ஏன் மற்ற கட்சியினருக்கு கிலி ஏற்பட வேண்டும் என்ற கேள்வி எழும். ஆனால், தொகுதியில் யார் வீட்டில் என்ன நல்லது கெட்டது நடந்தாலும் அண்ணன், அக்கா என உறவுமுறையோடு உரிமையாய் அழைத்து முதல் ஆளாய் பிரசண்ட் போடும் நபர்தான் ஜெகநாத் மிஸ்ரா. மற்ற கட்சியினர் வந்தாலும் உண்டு வராவிட்டாலும் உண்டு. மொத்தத்தில், மண்ணின் மைந்தனாய் உலா வரும் ஜெகநாத் மிஸ்ராவுக்கு தொகுதி மக்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்கை குத்துவார்கள் என்பது அங்குள்ள அரசியல்கட்சியினர் அறிந்த ஒன்றுதான். அதனால்தான் அவர்களுக்கும் கிலியாம்.கம்பம் தொகுதியை திமுக தக்க வைக்குமா?இதனிடையே, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மதுரை வழக்கறிஞர் சுபாஷ் நிற்கப்போவதாக கூறப்படுகிறது. கம்பத்தில் விஜய்க்கு இளைஞர்கள், இளம்பெண்கள் என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர்களின் வாக்குகள் த.வெ.க.வுக்குதான் என அவர்களே சூடம் ஏற்றாத குறையாக சத்தியம் செய்து வருகின்றனர். இப்படி கம்பம் தொகுதியில் 4 முனைபோட்டி நிலவும் என கூறப்படும் நிலையில், அந்த 4 வேட்பாளர்களுமே வாக்குகளை அக்கு அக்காக பிரிப்பார்கள் என்பதால் வெற்றி யாருக்கு என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. அப்படியே யார் வெற்றி பெற்றாலும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆக, திமுக கோட்டையான கம்பம் தொகுதியை திமுக தக்க வைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் சத்யராஜ். Related Link சேலம் - இரண்டாக பிரிந்து கிடக்கும் திமுகவினர்