Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அழகர்கோவிலில் ஆடிப்பௌர்ணமியையொட்டி, வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி
திருக்கோயில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை நடைபெற்றது.
அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவில் ஆடிப் பெருந்திருவிழா கடந்த 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது, இதில் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றதைத் தொடர்ந்து, அழகர்கோவில் காவல் தெய்வமான விளங்கக்கூடிய பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி திருக்கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் படி பூஜை மற்றும் சந்தனகாப்பு இன்று நடைபெற்றது.
இதற்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து சந்தன குடம் எடுத்து திருக்கோயிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி திருக்கோவிலில் உள்ள பதினெட்டு படிகளும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர ஜோதி ஏற்றபட்டதை தொடர்ந்து, பக்தர்களின் தரிசனத்திற்காக திருக்கோவில் கதவுகள் சிறிது நிமிடங்கள் மட்டும் திறக்கப்பட்டது.
அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் "கருப்பா" ,"கோவிந்தா" என்று கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் இந்த தரிசனத்திற்காக பெண்கள், குழந்தைகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், மாவட்ட காவல்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.