Also Watch
Read this
By: Fyrose Banu

மறைமலைநகர் மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். மக்களின் அடிப்படைத் தேவைகளே எங்கள் லட்சியம் செங்கல்பட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

தவெக சார்பில் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா
செங்கல்பட்டு மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
விஜயை அரியணை ஏற்றுவது நம் கடமை
அப்போது அவர் பேசுகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக அரியணையில் அமர வைப்பது ஒவ்வொரு தொண்டனின் கடமை என செங்கல்பட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்
ஒற்றுமையாக இருக்க வேண்டும்
தலைவர் விஜயை தமிழகத்தின் முதலமைச்சராக அமர வைக்க இன்னும் 50 நாட்களே உள்ளன என்றும் இந்த 50 நாட்கள் நாம் காட்டும் உழைப்பு தமிழகத்தின் அடுத்த பல ஆண்டுகால வளர்ச்சியைத் தீர்மானிக்கும், நமக்குள் எந்தவித ஏற்றத்தாழ்வும் இன்றி தோழர்களாகவும், சகோதரிகளாகவும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் தளபதியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

போர்கால அடிப்படையில் செய்யப்பட்டும்
செங்கல்பட்டு தொகுதியில் தூய்மையான குடிநீர், தரமான சாலைகள் மற்றும் முறையான மழைநீர் வடிகால் வசதிகள் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்தவுடன் போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்படும் என்றும் அதேபோல் அரசுப் பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் மற்றும் கதவுகளுடன் கூடிய பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும் என கூறினார். அரசு மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை வசதிகள் உறுதி செய்யப்படும் என கூறிய புஸ்ஸி ஆனந்த், மறைமலைநகர் மற்றும் மகேந்திரா சிட்டி போன்ற பகுதிகளில் தொழிற்சாலைகள் இருந்தும், உள்ளூர் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை கிடைப்பது கனவாகவே உள்ளதாகவும், விஜய் காட்டும் வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் இப்பகுதி இளைஞர்களுக்குத் தொழிற்சாலைகளில் நிரந்தர வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் எனவும் தெரிவித்தார்.

விசில் சின்னத்தை கொண்டு சேர்க்க வேண்டும்
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி புயல் மற்றும் கொரோனா காலங்களில் மக்களுக்காகப் பணியாற்றிய ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம் தான் என பெருமையுடன் தெரிவித்த அவர்ம் மக்களின் உயிர் மூச்சாகத் திகழும் தலைவர் தளபதியின் சின்னமான விசில் சின்னத்தைத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வீடு வீடாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved