Also Watch
Read this
Posted on: Feb 19, 2026 07:07 AM
By: Fyrose Banu

கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 1,800 அடுக்குமாடி குடியிருப்புகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் 2 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
புதிதாக 1,800 அடுக்குமாடி குடியிருப்புகள்
சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 1,800 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்
அப்போது பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்தியாவிலேயே வாழ்வாதாரம் இல்லாமல் அடிப்படை வசதி இல்லாமல் வாழ்ந்த மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தை கொண்டு வந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு, கான்கிரீட் அடுக்குமாடி வீடுகளை கட்டி தந்து வாழ வைத்த பெருமை கலைஞரை சாரும் என பெருமிதம் தெரிவித்தார். மார்ச் 2 ஆம் தேதி கோட்டூர்புரம் திட்ட பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்கிறார் என்றும் மேலும் அன்றைய தினம் 9 திட்ட பகுதிகளில் 4,035 குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாகவும் கூறினார்.
அதிமுக ஆட்சியில் 27,608 வீடுகள் தான் கட்டப்பட்டது
கடந்த அதிமுக ஆட்சியில் 27,608 வீடுகள் தான் கட்டப்பட்டது. ஆனால் 66,755 வீடுகள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் அதிலும் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள் தூரம் தூரமாக கட்டப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர் என குற்றச்சாட்டினார். மேலும் 28 ஆம் தேதி 852 வீடுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் கூறினார்.
அடிப்படை அறிவு வேண்டும்
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய கைலாஷ் புதிய பாலம் நன்றாக கட்டவில்லை என்ற பாமக தலைவர் அன்புமணி தெரிவித்த கருத்து குறித்தான கேள்விக்கு, பாலத்தில் எங்கு ஊழல் எதில் குறை என்று அன்புமணி வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் இதுகுறித்து பேசும் பொழுது அடிப்படை அறிவு வேண்டும் என காட்டமாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved