news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராதாபுரம் - 4 முனைப்போட்டியால் வாக்குகள் சிதறும்
tv

Also Watch

tv

Read this

ராதாபுரம் - 4 முனைப்போட்டியால் வாக்குகள் சிதறும்

வாக்காளப் பெருமக்களே... தேர்தல் 2026

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நெல்லை மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் வரும் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்பதால், தற்போதைய சபாநாயகர் அப்பாவு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆவாரா? என்பது சந்தேகம்தான் என்ற பேச்சு அடிபடுகிறது. தேர்தல் கோதாவில் குதிக்கும் வேட்பாளர்கள் ஆளாளுக்கு வாக்குகளை நாலாபுறமும் சிதறடிப்பார்கள் எனவும், கடைசியில் யார் வெற்றி பெற்றாலும் பெரிய வாக்கு வித்தியாசம் இருக்காது எனவும் தொகுதி களநிலவரம் சொல்கிறது.

திமுக - அதிமுக இடையே கடும் போட்டி
2026 தமிழக சட்டமன்ற தேர்தல், நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சிகளிலும் வேட்பாளர்களின் தேர்வும் விறுவிறுவென தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல்லை ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய சபாநாயகர் அப்பாவு இந்த தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருமுறை, சுயேட்சையாக ஒருமுறை, திமுக சார்பில் 2 முறை என மொத்தம் 5 முறை வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றார். அந்தவகையில், இந்தமுறையும் திமுக சார்பில் போட்டியிட அப்பாவு மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், கிழக்கு மாவட்ட செயலாளர் கிரகாம்பெல் ஆகியோர் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஞானதிரவியம் மீது உள்ளூர் மக்களுக்கு பெரிய அளவில் நல்ல பெயர் இல்லாததாக கூறப்படும் நிலையில், கிராகம்பெல்லுக்கு நல்ல பெயர் உள்ளதாகவும், தேர்தலுக்காக அவர் பணத்தை வாரி இறைக்க தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

12 பேர் விருப்பமனு
அதேபோல், அதிமுக தரப்பில் முன்னாள் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன், சௌந்தர்ராஜன், பால்துரை, ஒன்றிய செயலாளர் லாசர், ராஜா, ஏ.கே.சீனிவாசன், நாராயண பெருமாள் உள்ளிட்ட 12 பேர் விருப்பமனு அளித்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் இங்கு திமுகவும் - அதிமுகவும் நேரடியாக மோத உள்ளது.
ராதாபுரம் தொகுதியில் பிரதான பிரச்சனையே தண்ணீர் பற்றாக்குறை தான். கன்னியாகுமரி மாவட்டத்தின் அணைகளில் இருந்து வரக்கூடிய நீரை நம்பிதான் ராதாபுரம் கால்வாய் இருந்து வரும் நிலையில், பல இடங்களில் இன்னும் கடைமடை பகுதிகளுக்கே தண்ணீர் சென்று சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு பல நாட்களாக உள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் கால்வாய் தூர்வாரப்படாமலும், உடைப்புகளுடனும் காணப்படுவதாகவும், அது சம்மந்தமாக தாங்கள் முறையிடாத அரசியல்வாதிகளே இல்லை என சொல்லும் அளவுக்கு விவசாயிகள் திமுகவினர் மீது வருத்தத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

திமுகவினர் மத்தியில் அதிருப்தி
இதுஒருபுறமிருக்க, கடலோர பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பாக மாறி வருவதால் 605 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டம் 2026ன் தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதுவரை பணிகள்தான் நடக்கிறதே தவிர முடிவுக்கு வந்தபாடில்லை. அதுவும் திமுகவினர் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவிற்கும் பலமான வாக்கு வங்கி
இவைகளை எல்லாம் ஈடுகட்ட புதிய பேருந்து நிலையம், மருத்துவமனை, மாவட்ட கிளை நீதிமன்றம் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தாலும் அது வரும் தேர்தலுக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாகதான் உள்ளது. கடந்த 2016 தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிமுகவை சேர்ந்த ஐ.எஸ்.இன்பதுரையிடம் தோற்றார் அப்பாவு. அப்படியானால், தொகுதியில் அதிமுகவும் திமுகவும் தொட்டுவிடும் தூரத்தில்தான் வெற்றியை வைத்துள்ளனர்.

அதேபோல், திமுக - அதிமுகவின் வாக்கு வங்கிக்கு ஈடாக பாஜகவிற்கும் பலமான வாக்கு வங்கி இருக்கவே செய்கிறது. அதேபோல் இந்த 3 கட்சிக்கும் சற்றும் குறைவில்லாத வகையில் காங்கிரஸ் கட்சிக்குமே வாக்கு வங்கி உள்ளது. குமரி ஆனந்தன், சௌந்தர பாண்டியன் உள்ளிட்டோர் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுதான் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள். இப்படியாக திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாஜகவின் அரசியல் அப்டேட் உள்ள நிலையில் கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் ஏறத்தாழ 10 புள்ளி 39 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அதுவும் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படியான வாக்கு எண்ணிக்கை தான்.

ஐந்து கட்சிகளோடு, தவெக
இப்படி ஏற்கெனவே களத்தில் 5 கட்சிகள் இருக்கும் நிலையில் 2026ல் புதிதாக கால் பதித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தினரும் ஆட்டத்தில் உள்ளனர். தொகுதியில் உள்ள விஜய்யின் விசிறிகளான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வாக்குகள் நிச்சயம் த.வெ.க.வுக்கு தான் என தற்போதே பேசி வருகின்றனர். வழக்கமாக ராதாபுரத்தில் மும்முனை போட்டிதான் நிலவும். ஆனால், வரும் தேர்தலில் 4 முனைபோட்டி நிலவும் என்பதோடு அந்த 4 கட்சியினருமே வாக்குகள் நாலாபுறமும் சிதறடித்துவிடுவார்கள் என்றே தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் தொகுதியை சபாநாயகர் அப்பாவு தக்க வைத்துக்கொள்வாரா என்பது சந்தேகமே. 2026 சட்டமன்ற தேர்தல் ஆட்டத்தில் ராதாபுரம் தொகுதியில் யார் வெற்றி பெற்றாலும் அந்த வேட்பாளர் பெரிய அளவில் வாக்குகளை குவித்து வெற்றிக்கனியை எட்டுவது என்பது நடக்காத ஒன்று. அந்த வெற்றி வாய்ப்பு நூலிழையில்தான் கிட்டும் என்பதே நிதர்சனம்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் சிவக்குமார்.

Related Link
மானாமதுரை, சிவகங்கை - கனிமொழி ஆசியுடன் முந்தும் தமிழரசி                        

மானாமதுரை, சிவகங்கை - கனிமொழி ஆசியுடன் முந்தும் தமிழரசி

             

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோபி நயினார் இயக்கும் படத்திற்கு காலணி என பெயர்

0
6 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved