Also Watch
Read this
By: Manigandan Raja

இணையத்தில் விவாதத்தை தூண்டிய வாட்ஸ்அப் உரையாடல் :
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கனமழையால் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக கூறி லீவு கேட்ட ஊழியரின் கோரிக்கையை நிராகரித்த மேலாளார் ஆட்டோவிலோ அல்லது உள்ளூர் ரயிலைப் பிடித்து ஆபீஸ் வருமாறு கண்டிப்புடன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியருக்கும் அவரது மேலாளருக்கும் இடையிலான வாட்ஸ்அப் உரையாடல் இணையத்தில் வைரலாகி விவாதத்தை தூண்டியுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கைகள் இருக்கும் காலங்களிலும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல், பணியிடத்திற்கு வருமாறு கட்டாயப்படுத்துவதாக குற்றம் சாட்டிய ஐடி ஊழியர்கள், இத்தகைய சூழல்களில் Work From Home முறையை கட்டாயமாக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் 10 அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை :

கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரசு அதிகாரிகள் பத்து பேர்களின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய சோதனையில் சுமார் 43 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரகுமார், கர்நாடக கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக கண்காணிப்பு பொறியாளர் பிரவீன் ஸ்ரீஹரி, பெங்களூரு வேளாண் விளைபொருள் சந்தை குழு துணை இயக்குநர் புஷ்பா உள்ளிட்ட 10 பேர் அதிக சொத்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பெங்களூரு, ராய்ச்சூர், சித்ரதுர்கா, துமகூரு, ஷிவமொக்கா, கலபுரகி ஆகிய மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
கட்டுமானத்தில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்து விபத்து :

டெல்லியின் ரோஹினி பகுதியில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான நிலையில் இடிபாடுகளுக்குள் சுமார் 5 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
2 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், உள்ளே சிக்கியுள்ள மற்றொருவருக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துவரப்பட்டுள்ளது.