Also Watch
Read this
கூட்டுறவு வங்கிகள் மூலம் 75,000 ரூபாய் வரை பெற்ற தமிழ்நாடு விவசாயிகளின் பயிர்க்கடன் 100 விழுக்காடு முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. முழுமையாக ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த முறை...
கடந்த மே 25ஆம் தேதி 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்தார். ஆனால், பல்வேறு தரப்பில் இருந்து, விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. தொடர்ந்து, தற்போது கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடனாக 75,000 ரூபாய் வரை பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார். இதற்கு மேல் பயிர்க் கடன் பெற்றவர்களுக்கு 35,000 ரூபாய் வரை தள்ளுபடி செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

மறு ஆய்வுக் கூட்டம்
இதுகுறித்து வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;
முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால், 25.05.2026 தேதியில் ரூ.50,000 வரை பயிர்க் கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மாநிலம் முழுவதிலுமிருந்து இந்த விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கண்ட கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலனை செய்ய உத்திரவிட்டதற்கிணங்க மேற்கண்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட 15ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

மறு பரிசீலனை
இந்த மறு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் மறு பரிசீலனை செய்யப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாகச் செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை தள்ளுபடி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்ட உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved