Also Watch
Read this
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் ஏன் சென்சிட்டிவாக வைத்துள்ளீர்கள்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை திருப்பரங்குன்றம் தீப வழக்கில், இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி, பலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு மனு
அனைத்து மனுக்களையும் ஒரே நேரத்தில் விசாரித்த தனி நீதிபதி, மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிராகவும், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராகவும் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி தீர்ப்பை உறுதி செய்து, கார்த்திகை தீப நாளில் தீபத் தூணிலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டது.

இன்று விசாரணை
இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் இன்று ஜூன் 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசுத் தரப்பில், “உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது” எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “ஏன் இந்த வழக்கை நிலுவையிலேயே வைத்திருக்க விரும்புகிறீர்கள் ? நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் ?" என்று சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
அரசுத் தரப்பில் பதில்
அப்போது அரசுத் தரப்பில், “அது நோக்கம் அல்ல. 100 ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதைத் தொடர்வதா? புதிய முறையை தொடர்வதா? என்பது குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும்,” எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பிலும், தர்கா தரப்பிலும், அரசு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் இந்த வழக்கை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அமைதியான முறையில்...
இதனை தொடர்ந்து நீதிபதிகள், “மத நல்லிணக்கம் முக்கியமானது. அங்கு வாழும் மக்களின் அமைதி முக்கியமானது. மக்கள் கள நிலவரத்தை முழுமையாக அறிவார்கள். ஆகவே, இரு தரப்பிலும் அமைதியான முறையில் என்ன செய்யலாம்? என்பது தொடர்பாக முடிவு எடுக்க முயற்சிக்கலாம்,” என்று யோசனை கூறி, விசாரணையை தள்ளி வைத்தனர்.