Also Watch
Read this

இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்து உள்ளார். லண்டனில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான டவுனிங் ஸ்ட்ரீட் வளாகத்திற்கு வெளியே நின்றபடி, தனது விலகல் முடிவை முறைப்படி நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
இங்கிலாந்து பிரதமர்...
கடந்த 2024 ஜூலையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, தொழிலாளர் கட்சி, ஆட்சியை பிடித்தது. இருந்த போதிலும், கடந்த சில வாரங்களாகவே, ஸ்டார்மரின் தலைமைக்கு எதிராகக் கட்சிக்குள்ளேயே புகைச்சல் ஏற்பட்டது. அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் எம்பிக்கள் அளித்த தொடர் அரசியல் நெருக்கடிக்கு பணிந்தே, பிரதமர் கீர் ஸ்டார்மர், தனது பதவிக்காலத்தை முன்கூட்டியே முடித்துக் கொள்ளும் இறுதி முடிவை அறிவித்து உள்ளார்.

அரசியல் அழுத்தம்...
இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் மற்றும் பிராந்திய தேர்தல்களில் தொழிலாளர் கட்சி, மாபெரும் தோல்வியை சந்தித்தது. இதனால், சொந்தக் கட்சிக்குள் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனாலும், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை அவரே தொடர்ந்து பதவியில் நீடிப்பார். பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்ததற்கான காரணங்கள் மற்றும் அரசியல் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளூர் தேர்தல்களில், தொழிலாளர் கட்சி அடைந்த சரிவு, கட்சியில் பேசு பொருளாகி உள்ளது. எதிர்க்கட்சிகளின் எழுச்சியும், பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
முடிவை அறிவித்தார்
உள்நாட்டுக் குழப்பம் மற்றும் ஆன்டி பர்ன்ஹாம் (Andy Burnham) மேக்பீல்ட் (Makerfield) இடைத்தேர்தலில் பெற்ற அமோக வெற்றி, கீர் ஸ்டார்மரின் தலைமைக்கு நேரடி சவாலாக மாறியது. இதன் காரணமாக எழுந்த கடுமையான அழுத்தங்களால், ஸ்டார்மர் தனது முடிவை அறிவித்தார்.

ஜூலை 9ஆம் தேதி வரை
தொழிலாளர் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் கீர் ஸ்டார்மர் விலகுவதாக அறிவித்து உள்ளார். புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூலை 9 வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, கோடைகால விடுமுறைக்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் புதிய தலைவர் பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமைக்கான போட்டி முடியும் வரை, கீர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து சீரான முறையில் அதிகாரத்தை மாற்றிக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10 ஆண்டுகளில், 5 பிரதமர்கள்...
இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் ஐந்து பிரதமர்கள், தங்களின் பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யாமல் முன்கூட்டியே விலகி உள்ளனர். தற்போது, கீர் ஸ்டார்மரும் தனது அதிகாரப்பூர்வ ராஜினாமாவை அறிவித்துள்ளதன் மூலம், கடந்த பத்தாண்டுகளில் டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தின் முன்பாக நின்று, முன்கூட்டிய விடைபெறுவதை அறிவித்த ஆறாவது பிரதமர் என்ற நிலையை அவர் எட்டி உள்ளார். ஸ்டார்மர் தனது விலகலை முறைப்படி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தொழிலாளர் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சித் தேர்தல் வழிமுறைகள் உடனடியாகத் தொடங்கியுள்ளன. இங்கிலாந்தில் ஆளும் கட்சிக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை அப்படியே நீடிப்பதால், அங்கு பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.