Also Watch
Read this
பிரதமர் மோடியின் வீடியோ, முகநூல் பக்கத்தில் இருந்து திடீர் என நீக்கப்பட்ட விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு, மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது. என்ன நடந்தது?

பிரதமர் மோடி செல்பி வீடியோ
மாணவர் போராட்டங்கள் தொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோ, முகநூல் பக்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது தொடர்பாக அதன் தாய் நிறுவனமான மெட்டா மன்னிப்பு கேட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே, அந்த வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டதாகவும், பின்னர் மீண்டும் பதிவேற்றப்பட்டதாகவும் மெட்டா விளக்கம் அளித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...
நீட் எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்தபோது பிரதமர் மோடி ஜூலை 23ஆம் தேதி நள்ளிரவில் தனது சமூக வலைத்தளத்தில் சுமார் 3 நிமிடங்கள் கொண்ட செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அது தொடர்பாக பேசியிருந்தார்.

நீட் வினாத்தாள் கசிவு...
கேள்வித்தாள் லீக் என்பது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் விஷயம், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், சுமார் 22 லட்சம் மாணவர்கள் எதிர்பார்த்திருந்த நீட் தேர்வை தாமதமின்றி நடத்துவது அரசின் மிக முக்கிய பொறுப்பு, வினாத்தாளை லீக் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் மோடி பேசி இருந்தார்.

முகநூலில் காணாமல் போனது...
பிரதமர் மோடி வெளியிட்டிருந்த இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 24 மணி நேரத்திற்குள் கோடிக்கணக்கான வியூஸ்களை பெற்றிருந்தது. இதனை பாஜக ஆதரவாளர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களிலும் ஷேர் செய்து வந்தனர். இருப்பினும், பிரதமர் மோடி பதிவிட்ட இந்த வீடியோ சில மணி நேரங்களிலேயே பேஸ்புக்கில் இருந்து காணாமல் போனது.
என்ன நடந்தது?

சம்மன் அனுப்பியது
இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள மத்திய அரசு, மெட்டாவின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. மெட்டா மற்றும் இன்ஸ்டாகிராமின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ள தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ‘வீடியோ எப்படி நீக்கப்பட்டது? எப்படி அந்த தவறு நடந்தது, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது குறித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும்,’ என கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. .