Also Watch
Read this

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பை தொடரில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
இந்தியா vs நியூசிலாந்து
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் நடந்த இறுதி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள், 2 கோல் அடித்து அசத்தினர். நியூசிலாந்து அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியாததால், 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி பட்டத்தை வென்றது.
பரபரப்பான ஆட்டத்தில்...
போட்டி தொடங்கிய 4ஆவது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி, நவ்நீத் கவுர் முதல் கோல் அடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து முதல் கால்பகுதியின் இறுதி நிமிடத்தில், அதாவது 15ஆவது நிமிடத்தில், தீபிகா அடித்த பந்தை சுனிலிதா டோப்போ லாவகமாக நியூசிலாந்து கோல் போஸ்டிற்குள் திருப்பினார்.
இதனால், முதல் கால் பகுதியிலேயே இந்திய அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற பலமான முன்னிலையைப் பெற்றது.

தோல்வியே இல்லை...
தோல்விகளையே சந்திக்காமல், கோப்பையை வென்ற இந்திய அணி
இந்த தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட தோற்காமல் மகளிர் இந்திய ஹாக்கி அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அதாவது குரூப் சுற்றில்,
* அமெரிக்கா 3க்கு 2
* ஜப்பான் 2க்கு 1
* உருகுவே 3க்கு 2
என்னும் கணக்கில், எதிர் அணிகளை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிப் போட்டியில், சிலி அணியை 6க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் துவம்சம் செய்தது. கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தொடரின் முதலாவது பதிப்பிலும் இந்திய அணியே கோப்பையை வென்றிருந்த நிலையில், 2ஆவது முறையாக நேஷன்ஸ் கப் கோப்பையைக் கைப்பற்றி உள்ளது.
பரிசுத்தொகை அறிவிப்பு
இந்திய மகளிர் அணியின் இந்த வரலாற்று பெருமைமிகு வெற்றியைப் பாராட்டும் வகையில், ஹாக்கி இந்தியா அமைப்பு பல்வேறு ரொக்கப் பரிசுகளை அறிவித்து உள்ளது. இதன்படி, இந்திய அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா 3 லட்சம் ரூபாயும், அணியின் பிற பயிற்சி மற்றும் உதவிப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1.5 லட்சம் ரூபாயும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறந்த வீராங்கனை... ஆட்ட நாயகி...
இந்திய அணியின் வெற்றிக்காகக் களத்தில் கடுமையாகப் போராடிய லால்ரெம்சியாமி ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான தீபிகா, இந்தத் தொடர் முழுவதும் மொத்தம் 6 கோல்களை அடித்து, அமெரிக்காவின் ஆஷ்லே செஸ்ஸாவுடன் இணைந்து இந்தத் தொடரில் மிக அதிக கோல்கள் அடித்த வீராங்கனை என்ற பெருமையைப் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் மோடி வாழ்த்து
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற FIH ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பை தொடரின், இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தொடர் முழுவதும் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடியதாகவும், இந்திய ஹாக்கி வீராங்கனைகள் பெருமையையும், மகிழ்ச்சியையும் தேடித் தந்துள்ளதாகவும் பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த வெற்றி, ஹாக்கி விளையாடப் பலரையும் ஊக்குவிக்கட்டும் எனவும் பிரதமர் மோடி, பெருமிதம் தெரிவித்து உள்ளார்.