Also Watch
Read this

ஸ்பெயின், போர்ச்சுகலுக்கு இடையிலான ரவுண்ட் ஆப் 16 ஆட்டத்தைக் காண மைதானத்தில் இருந்த அத்தனை பேரும் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தனர். உலகத்தில், இந்த போட்டியை பார்த்த எவரும் இந்த மனநிலையில் தான் இருந்தனர். காரணம்... கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக வலம்வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை பயணம் நிறைவுக்கு வந்தது என்பதை உணர்ந்த தருணம் அது.

தோல்வியுடன் வெளியேறிய அந்த நொடி
2026 உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆப் 16 ஆட்டத்தில், போர்ச்சுகல் அணி தோல்வியடைந்து வெளியேறிய அந்த நொடி, வெறும் ஒரு அணியின் வெளியேற்றம் மட்டுமல்ல, அது கால்பந்து உலகின் மாபெரும் அரசன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு கலைந்த தருணம். ஐந்து உலகக் கோப்பைகளில் கோல் அடித்த இந்த மனிதர், தனது ஆறாவது உலகக் கோப்பை பயணத்தை கண்ணீரோடு முடித்திருக்கிறார்.

எளிய குடும்பத்தில் இருந்து...
CR7 என்று ரசிகர்களால் அன்பாக கொண்டாடப்படும் காவிய நாயகனின் ஆரம்ப காலம், போர்ச்சுகலின் மடீரா தீவில் ஒரு எளிய குடும்பத்தில் தான் தொடங்கியது. தந்தை ஒரு தோட்டத் தொழிலாளி மற்றும் பகுதி நேர கிட் மேன், தாய் ஒரு சமையல்காரர். அந்த பொருளாதார பின்னணியில் இருந்து வந்த ரொனால்டோ தான் மிகப்பெரும் சாதனைகளுக்கு சொந்தகாரராக, ஜொலித்தவர். அவரது 12ஆவது வயதில் Sporting Lisbon கிளப்பில் சேர்வதற்காக, தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து லிஸ்பன் நகருக்கு வந்தார். அதற்கு பின்பு வாழ்க்கை அவருக்கு தந்த சவால்கள் இன்னும் அதிகம். அவரது 15ஆவது வயதில், அவரது இதயம் மிக வேகமாகத் துடிக்கும் Racing Heart நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

நோயாளியாக... தன்னம்பிக்கையுடன்...
இனி, இவர் கால்பந்து விளையாட முடியாது என்று மருத்துவர்கள் கூறியபோதும், தன் தன்னம்பிக்கையை விடவில்லை. ஆபத்தான லேசர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் மைதானத்திற்குள் நுழைந்தார். கிளப் போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், யுவென்டஸ் என பல உச்சங்களை அவர் தொட்டாலும், சர்வதேச அரங்கில் போர்ச்சுகல் அணிக்காக அவர் விளையாடிய போது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார். அவரால் கிளப் அணிகளுக்கு ஆட முடியுமே தவிர, நாட்டுக்காக கோப்பை வெல்ல முடியாது என்று பலரும் விமர்சித்தனர். ஒவ்வொரு முறை கீழே தள்ளப்படும் போதும் அவருடைய வேகம் அதிகரித்ததே தவிர எங்கேயும் குறையவில்லை.

வரலாற்று சாதனையின் சொந்தக்காரர்
சவால்களையே தனது படிக்கட்டுகளாக மாற்றிய ரொனால்டோ, சாதனைகளின் மறுபெயராக மாறினார். சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் All-time Leading International Scorer என்ற மகுடத்தை சூடினார். 5 முறை உலகின் சிறந்த வீரருக்கான பாலன் டி ஆர் Ballon d'Or விருது, 5 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பை என அவர் தொடாத உயரமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, 2016ஆம் ஆண்டு யூரோ கோப்பையை போர்ச்சுகல் நாட்டிற்கு வென்று கொடுத்து, தம் மீதான விமர்சனங்களை சுக்கு நூறாக்கினார். உலகக் கோப்பை தொடர்களில், 2006 முதல் 2026 வரை போர்ச்சுகல் அணியின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார். உலகக் கோப்பை வரலாற்றில் 5 வெவ்வேறு தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை தன்வசப்படுத்தினார்.

அந்த ஒரு நிமிடம்...
வயது 41ஐ எட்டியிருந்தாலும், 2026 உலகக் கோப்பையில் தனது நாட்டிற்கு உலகக் கோப்பையை வென்று தர வேண்டும் என்ற ஒற்றைக் கனவோடுதான் ரொனால்டோ களம் இறங்கினார். ஆனால், ரவுண்ட் ஆப் 16 ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி ஸ்பெயினிடம் போராடி தோற்றபோது, ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. நடுவர் இறுதி விசிலை ஊதியதும், ரொனால்டோ மைதானத்திலேயே உடைந்து போனார். வீரர்கள் பின்தொடர, அவர் அழுது கொண்டே வெளியேறிய காட்சி, அவரது ரசிகர்களின் இதயங்களை நொறுங்கச் செய்தது.

வறுமை, இதய நோய், தனிமை, விமர்சனங்கள் என அனைத்தையும் வென்று, உழைப்பால் மட்டுமே ஒரு மனிதன் உலகையே ஆள முடியும் என்பதற்கு ரொனால்டோவே ஆகச்சிறந்த உதாரணம். அவர் உலகக் கோப்பையை வெல்லவில்லை, ஆனால் உலகக் கோப்பை விளையாட்டை விடவும் பெரிய அரியணையை உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வென்றிருக்கிறார். உலகக் கோப்பை மைதானங்களில் இனி இந்த நம்பர் 7 ஜெர்சியை நாம் பார்க்க முடியாமல் போகலாம், ஆனால் அவர் விட்டுச் சென்ற உத்வேகம் தலைமுறைகள் கடந்தும் கால்பந்து மைதானங்களில் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

தேங்க்யூ சிஆர்7....
