Also Watch
Read this
சிரியாவில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே குண்டு வெடித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்து உள்ளது. ஆனால், தமக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் வெடிச்சத்தம் கூட கேட்கவில்லை என்றும் மேக்ரான் தகவல் கூறி உள்ளார்.

சிரியாவில் பிரான்ஸ் அதிபர்
சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இங்குள்ள சொகுசு ஹோட்டலில் மேக்ரான் தங்கி இருக்கிறார். சிரிய அதிபர் அஹ்மத் அல்ஷராவை சந்திக்க, ஹோட்டலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவரது மாளிகைக்கு புறப்பட்டார். ஹோட்டலை விட்டு அவர் வெளியே சென்ற சில நிமிடங்களில், குறிப்பிட்ட ஹோட்டலுக்கு மிக அருகில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து உள்ளன. மொத்தம் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடும் சத்தம், புகை மூட்டம்
இந்த சம்பவத்தால், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சாலைகள் மூடப்பட்டதுடன், பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த உள்ளூர்வாசிகள் திடீரென குண்டு வெடித்ததில் கடும் சத்தம் கேட்டதாகவும், இதனை தொடர்ந்து புகை மூட்டம் எழும்பியதை காண முடிந்ததாகவும் தகவல் தெரிவித்து உள்ளனர்.

எந்த பாதிப்பும் இல்லை
இதனிடையே, அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எவ்வித பாதிப்பும் இன்றி முழு பாதுகாப்பில் உள்ளார் என்று பிரான்ஸ் அதிபர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. தமக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் வெடிச்சத்தம் கூட கேட்கவில்லை என்றும் மேக்ரான் தகவல் கூறி உள்ளதாவும் கூறப்படுகிறது.

அவரின் அரசு முறைப்பயணத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் பஷர் அல் அசாத் ஆட்சி வீழ்ந்த பின்னர் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மேக்ரான் ஆவார்.