Also Watch
Read this

பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் அர்லேகர் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூடுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசின் முதல் கூட்டம் என்பதால் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பலாம் என்றும் கூறப்படுகிறது.

தனிப்பெரும் கட்சியாக தவெக
நடந்து முடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியும் அமைத்தது. இந்த நிலையில், 17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் மற்றும் புதிய அரசு பொறுப்பேற்றதும் நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நேரில் சென்று அழைப்பு விடுத்தார். மேலும், ஆளுநர் உரையும், ஆளுநர் மாளிகைக்கு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளாக...
கடந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். 2023ஆம் ஆண்டு, முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவில்லை. இதனையடுத்து, அந்த வார்த்தைகள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என்று அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், ஆளுநர் பாதியிலேயே புறப்பட்டு சென்றார்.

ஆளுநர் vs தமிழ்நாடு அரசு
இதே போல், 2024ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து, உடனடியாக தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். பின்னர், அந்த உரையை அப்போதைய பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்து அவைக்குறிப்பில் பதிவு செய்தார்.

கடந்தாண்டும், முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதே சமயம், மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதாகவும், ஆளுநர் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில், ஆதாரமற்ற பல தகவல்கள் இருந்ததால் வெளிநடப்பு செய்ததாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தாண்டு தவெக ஆட்சியில்...
இந்நிலையில், கடந்த கால பேரவை மரபுகள் முறையாக பின்பற்றப்படும் என்று தற்போதைய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்து உள்ளார். எனவே, பேரவை மரபுகளை ஆளுநர் அர்லேகர் ஏற்று, தனது உரையை வாசிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை...
தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் நாளை தொடங்க உள்ளது. நாளைய தினம் ஆளுநர் உரைக்கு பின்னர், அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என முடிவு செய்யப்படும். தொடர்ந்து 19, 20 ஆகிய இரு நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதன்படி, 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பிறகு, 22ஆம் தேதி திங்கள் கிழமை ஆளுநர் உரை மீதான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலுரை வழங்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அலுவல் ஆய்வுக்குழுவில் யார் யார்?
தலைவர் - ஜே.சி.டி. பிரபாகர், பேரவைத் தலைவர்
உறுப்பினர்களாக
ச. ஜோசப் விஜய், முதலமைச்சர்
என். ஆனந்த், ஊரக வளர்ச்சி, நீர்வளத் துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன், வருவாய் அமைச்சர், பேரவை முன்னவர்
நிர்மல் குமார், எரிசக்தி சட்டத் துறை அமைச்சர்
செ. ராஜேஷ் குமார், சுற்றுலாத் துறை அமைச்சர்.
வன்னி அரசு, சமூக நீதித் துறை அமைச்சர்
ரா. சபரிநாதன், அரசு தலைமைக் கொறடா
உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்
ஏ.வ. வேலு, திமுக எம்எல்ஏ
சிவசங்கர், திமுக எம்எல்ஏ
எடப்பாடி பழனிசாமி, அதிமுக
ஓ.எஸ். மணியன், அதிமுக
சௌமியா அன்புமணி, பாமக
ஆர். செல்லசுவாமி, சிபிஎம்
ராமச்சந்திரன், சிபிஐ
எஸ்எஸ்பி சையது பாரூக் பாஷா, ஐயுஎம்எல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தயார் நிலையில் எதிர்க்கட்சிகள்...
இந்த நிலையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, மின் வெட்டு, மது பாட்டிலுக்கு 10 ரூபாய், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி தவெக அரசுக்கு தலைவலியை கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved