Also Watch
Read this
வரும் 19, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்துக்குப் பின் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்று, உரை நிகழ்த்தினார். அதற்குப் பின்னர் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது;
அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, வரும் ஜூன் 19, 22, 23 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரை மீது விவாதம், பதிலுரை நடைபெறும். ஜூன் 19ஆம் தேதி மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, முன்னாள் சட்டப்பேரவைச் செயலாளர் ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

கேள்வி பதில் நேரம் கிடையாது
இந்த கூட்டம், குறுகிய கால கூட்டத்தொடராக இருக்கும் காரணத்தால், கேள்விகளை அனுப்பி அந்தந்த துறைகளில் பதிலைப் பெற்றுத் தருவதில் காலதாமதம் ஏற்படும். ஆகவே, இந்தக் கூட்டத் தொடரில் வினா-விடை நேரம் கிடையாது.
2 முறை தேசிய கீதம்
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பதே நம் நோக்கம். தேசிய கீதம் இன்று இருமுறை பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை. இந்த நடைமுறை தொடர்வது நன்றாக இருக்கும். மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு மிக சுமூகமான முறையில் இந்த சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஒத்துழைப்பு தந்த ஆளுநருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

சட்டசபை நேரலை
சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். அலுவல் ஆய்வுக் குழுவில் தேவையான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவர், கொறடா குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ராஜினாமா எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்
அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் 7 தினங்களுக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் விளக்கம் கொடுத்து உள்ளனர், அது ஆய்வில் உள்ளது. இதுபற்றி ஆய்வுக்குப் பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved