Also Watch
Read this
By: Manigandan Raja
திராவிட மாடல் 2.O ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், தமிழக சகோதரிகளுக்கு இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்ட வீடியோ
இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது;
மிகவும் முக்கியமான விஷயத்துக்காக தான் இந்த வீடியோ. இன்று காலை அரசு சார்பில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்ட பயனாளிகளுக்கு ரூ.5,000 வங்கிக் கணக்கில் வரவாக வந்திருக்கும். எதற்காக இந்த பணம் என்றால், நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றபோது கொரோனா நோய் பரவலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. அதை சமாளித்து மக்களின் உயிரை காத்தது மட்டுமல்லாது வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ரூ.4,000 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கினோம். முந்தைய ஆட்சியில் விட்டுச் சென்ற நிதி நெருக்கடியை சமாளித்து ஆட்சிக்கு வந்ததும் பல திட்டங்களை நிறைவேற்றினோம்.
மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய்
ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக, மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தேன். அப்போது இது சாத்தியமே இல்லை என சிலர் சொல்லி இருந்தார்கள். இருப்பினும் நிதி நெருக்கடியை சமாளித்து, ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையை மீறி, கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். முதலில் 1.13 கோடி மகளிருக்கு பயனளித்து வந்த இந்த திட்டமானது அண்மையில் விரிவுபடுத்தப்பட்டது. இப்போது 1.31 கோடி மகளிர் பயன் பெற்று வருகின்றனர்.
மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன

மாதாந்திர செலவை எப்படி சமாளிக்க முடியும்?
1.31 கோடி மகளிர் பயனடையும் இந்த திட்டத்தை மூன்று மாதங்கள் நிறுத்தி வைத்தால், நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என்பதை உங்கள் வீட்டில் ஒருவராக உள்ள எனக்கு நன்றாகவே தெரியும். கடும் வெயிலில் வேலைக்கு செல்ல கடினமாக இருக்கும் கோடை காலத்தில் இந்த தொகை நிறுத்தப்பட்டால் உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என்பது எனக்கு தெரியும். உங்கள் மாதாந்திர செலவை எப்படி சமாளிக்க முடியும்? குடும்பத்தினருக்கு மாத்திரை மருந்து வாங்கித் தர முடியுமா? தேர்வு நேரத்தில் குழந்தைகளுக்கான கல்விச் செலவை சமாளிக்க முடியுமா? இதையெல்லாம் எண்ணி பார்த்துதான் முக்கியமான முடிவை எடுத்துள்ளேன்.

ரூ.5,000 - சிறப்பு மகளிர் உரிமைத் தொகை
இந்த பிப்ரவரி மாதம் மட்டுமல்லாது அடுத்த இரண்டு மாதங்களான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையையும் சேர்த்து ரூ.3 ஆயிரம், கூடுதலாக கோடை கால செலவை கருத்தில் கொண்டு மேலும் ரூ.2 ஆயிரம் சிறப்பு தொகையும் சேர்த்து இந்த பிப்ரவரி மாதம் ரூ.5 ஆயிரத்தை சிறப்பு மகளிர் உரிமைத் தொகையாக 1.31 கோடி மகளிருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த தருணத்தில், அன்பான வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். இந்த 5 ஆயிரம் ரூபாயை அடுத்த மூன்று மாதங்களுக்கு நீங்கள் பயன்படுத்த வேண்டி உள்ளது. அதனால், கவனமாக செலவிடுங்கள். முடிந்தவரை சேமிக்கவும் பாருங்கள்.

ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்
அன்பு சகோதரிகளே, உங்கள் ஆதரவோடு அடுத்து அமைய உள்ளதும் திராவிட மாடல் ஆட்சிதான். அதனால் உங்கள் மனம் குளிரும் சிறப்பான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் உங்களுக்கான உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். சொன்னதை செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி இது. இதை எப்படி செய்வீர்கள்? என சிலர் கேட்கலாம். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் வளர்ச்சி பெற செய்துள்ளோம். அதனால் எந்த தடை வந்தாலும் அதையெல்லாம் தாண்டி ‘தமிழ்நாடே’ வெல்வோம் ஒன்றாக.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved