Also Watch
Read this
By: Manigandan Raja

திருநெல்வேலி டவுன் சங்கரநாராயணன் தெருவைச் சேர்ந்தவர்கள் முகமது ரஹ்மத்துல்லாஹ் 28, அவரது மனைவி பாத்திமா சுஜிதா 25 ஆகியோர் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருகின்றனர் இவர்கள் சில தினங்களுக்கு முன்பு வண்ணார்பேட்டையில் உள்ள தங்கமயில் நகைக்கடைக்கு குழந்தைகளுடன் சென்று, தாங்கள் கொண்டு வந்திருந்த ஒரு தங்கச் செயினை காண்பித்து, அதே வடிவில் வேறு நகை வேண்டும் என கேட்டுள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரம் பல்வேறு நகைகளை பார்த்த அவர்கள், எதுவும் பிடிக்கவில்லை எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் இரவில் நகைகளை சரிபார்த்த கடை ஊழியர்கள், ஒரு செயின் மீது சந்தேகம் ஏற்பட்டு ஆய்வு செய்தபோது அது தங்கம் அல்ல, வெள்ளி நகைக்கு தங்க முலாம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகமது ரஹ்மத்துல்லாஹ் மற்றும் பாத்திமா சுஜிதா ஆகியோர் தாங்கள் கொண்டு வந்த போலி நகையை மாற்றி வைத்து, சுமார் 5 பவுன் எடையுள்ள தங்கச் செயினை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து நகைக்கடை மேலாளர் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, நாகர்கோவிலில் உள்ள மற்றொரு நகைக்கடையிலும் இதே பாணியில் நகை திருட முயன்றபோது ஒரு தம்பதி கடை ஊழியர்களிடம் சிக்கினர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் அவர்களை திருநெல்வேலிக்கு அழைத்து வந்து கைது செய்தனர். இந்த வழக்கில் நகை திருட்டில் உறு துணையாக இருந்த திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த ரசூல் பாரூக் 27 என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும் தம்பதிகளுடன் சென்ற 16 மற்றும் 17 வயதுடைய 2 சிறார்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில்,
அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து ஐந்து பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது இதேபோன்ற முறையில் வேறு இடங்களிலும் நகை மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved