பொறுப்பு வகிப்பது தொடர்பாக தகராறு : மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரைச் சேர்ந்த மணிகண்டன் (36) என்பவருக்கும், அவரது உறவினரான மணி என்பவருக்கும் அப்பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் பொறுப்பு பார்ப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு இதுதொடர்பாக மணி மற்றும் மணிகண்டன் தரப்பிற்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மணி தரப்பினர் வீட்டின் முன்பு நின்றுக் கொண்டிருந்த மணிகண்டனை தாக்கி உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த மணிகண்டனின் தம்பி அர்ஜுனன் (32) மணி தரப்பினரிடம் சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். இதில் மணி தரப்பினருக்கும், அர்ஜுனனுக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், மணி தரப்பினர் அர்ஜுனனை கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில், முகம் மற்றும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனிடையே, இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேலூர் காவல்துறை சார்பு ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர். கொலை செய்யப்பட்ட அர்ஜுனனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அர்ஜுனனின் சகோதரர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், திருவாதவூரைச் சேர்ந்த மணி (55), அஸ்வின், அங்குபாண்டி, கண்ணதாசன், அய்யனார், சந்தோஷ், சேகர், விஜய் ஆகிய 8 பேர் மீது மேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஏ1 குற்றவாளியான மணி, சந்தோஷ் உட்பட மூன்று பேரை, மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் தான், இக்கோவிலில் திருவிழா நடைபெற்ற நிலையில், தற்போது கோவிலில் பொறுப்பு வகிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டு கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. Related Link NLC சுரங்க விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்