Also Watch
Read this
Posted on: Feb 19, 2026 03:22 AM
By: Fyrose Banu

போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர், முதுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி முருகேசன் - வசந்தி. இவர்களது 15 வயது மகள் வாணிஸ்ரீ, பிறவியிலேயே பேச்சுத்திறன் மற்றும் நடக்கும் திறன் அற்ற மாற்றுத்திறனாளி ஆவார். நடக்க முடியாத நிலையிலும், கல்வியின் மீது கொண்ட ஆர்வத்தால் தற்போது வீட்டில் இருந்தபடியே 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
சேமிப்புக் கணக்கை கடந்த 10 மாதங்களாக முடக்கிய இந்தியன் வங்கி
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வாணிஸ்ரீயின் தாயார் வசந்தி உள்ளிட்ட 12 பெண்கள் மகளிர் குழு மூலம் ரூ. 6 லட்சம் கடன் பெற்றுள்ளனர். இதில் வசந்தி தனது பங்கிற்கான மாதத் தவணையை (ரூ. 3,500 வீதம் 13 மாதங்கள்) குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவரிடம் முறையாகச் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், வசூலிக்கப்பட்ட பணம் வங்கி கணக்கில் முறையாகச் செலுத்தப்படவில்லை எனத் தெரிகிறது. குழுவின் கடன் நிலுவையைக் காரணம் காட்டி, போச்சம்பள்ளி இந்தியன் வங்கி (Indian Bank) நிர்வாகம் வசந்தியின் சேமிப்புக் கணக்கை கடந்த 10 மாதங்களாக முடக்கி வைத்துள்ளது.
முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
இதனால் அக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட வாணிஸ்ரீக்கான மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தமிழக அரசின் *மகளிர் உரிமைத்தொகை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கூலி போன்ற நிதிகளைப் பெற முடியாமல் குடும்பம் தவித்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகைகளை, கடன் நிலுவைக்காக வங்கிகள் முடக்கக் கூடாது எனத் தமிழக அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. இருப்பினும், போச்சம்பள்ளியில் வங்கி மேலாளரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
ஒருவேளை உணவிற்கே வழியின்றி தவிக்கும் குடும்பம்
கடந்த 10 மாதங்களாக வாழ்வாதாரத்திற்குத் தேவையான பணம் வங்கி கணக்கிலேயே முடங்கிக் கிடப்பதால், ஒருவேளை உணவிற்கே வழியின்றி இக்குடும்பம் தவித்து வருகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளி மகளின் மருத்துவத்தேவைகளுக்கும், கல்விச் செலவிற்கும் பணமில்லாமல் பெற்றோர் பெரும் இக்கட்டான நிலையில் உள்ளனர். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, முடக்கப்பட்ட வங்கி கணக்கை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved