Also Watch
Read this
காவிரி நதி நீர் விவகாரத்தில், தமிழக விவசாயிகளின் உரிமை நிச்சயமாக நிலை நாட்டப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் உறுதி அளித்தார். மேகதாது விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பேரவையில் திட்டவட்டமாக கூறினார்.
மேகதாது விவகாரம்
தமிழக சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் குறித்து, அமைச்சர் ஆனந்த் பேசியதாவது;
மேகதாது விவகாரத்தில், கடந்த மே 25ஆம் தேதி அரசு தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் உயரதிகாரிகளுடன் முதல்வர் விஜய், மேல் நடவடிக்கை குறித்து ஆலோசித்தார். அதன் பின்னர், மே 26ஆம் தேதி, பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம் வாயிலாகவும், மே 27ல் பிரதமரை நேரில் சந்தித்தும் மேகதாது திட்டத்துக்கு எவ்வித அனுமதியும் அளிக்க வேண்டாம் என வலியுறுத்தினார். முதல்வரின் உத்தரவின்படி, டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் தமிழக அரசின் சார்பாக மேகதாது திட்டத்தை எதிர்த்து மே 27ல் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதமருக்கு முதல்வர் கடிதம்
இந்த நிலையில், ஜூன் 18ஆம் தேதி அன்று அமைச்சர்கள், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து மேகதாது திட்டத்தை எதிர்க்கும் தீர்மானத்தை முன்மொழியவும், அதற்கு உறுப்பினர்களின் ஆதரவைக் கோரவும் முடிவெடுத்தனர். இந்த தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த மார்ச் 4ஆம் தேதி தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு மேகதாது விவகாரத்தில் ஒரு புதிய நடுவர் மன்றம் அமைக்க முன்மொழிவு அனுப்பியதை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதன்படி ஜூன் 19ல் நடுவர் மன்றம் அமைக்குமாறு வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் நகலை அன்றே தனது நேர்முக கடிதம் வாயிலாக பிரதமருக்கு முதல்வர் விஜய் அனுப்பியுள்ளார்.

நடுவர் மன்றம், விளக்கம்
இவ்வாறு மேகதாது அணை திட்டத்தை முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது. ஆனால், நடுவர் மன்றம் அமைக்குமாறு கோருவது சரியான அணுகுமுறை இல்லை என சிலர் கருதுகின்றனர். சில தரப்பினர் பரப்பும் தவறான புரிதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசின் நேர்த்தியான அணுகுமுறை குறித்து அவையில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கடந்த நவம்பர் 13ஆம் தேதி அன்று மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக நாம் தொடர்ந்த வழக்கை, இத்திட்டம் ஆரம்ப நிலையில் தான் உள்ளது எனக் கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த தீர்ப்பின் பேரால் மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனக் குறிப்பிட்டது.

அடுத்த கட்ட நகர்வு
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கர்நாடகா மற்றும் கேரளா தன்னிச்சையாக அனுமதிக்கப்படாத திட்டங்களை கையில் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். கடந்த டிசம்பர் 25ல், ஒன்றிய அரசு தன்னிச்சையாக காவிரி நீர்வளத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. மேலும், கடந்த மே மாதம் ஒன்றிய ஜல்சக்தி அமைச்சக கடிதம் மூலம், மத்திய நீர்வள ஆணையம், கர்நாடக அரசின் மேகதாது திட்ட அறிக்கை டிபிஆர் மீது தனது தொழில்நுட்ப கருத்துக்களை வழங்கி அடுத்த கட்ட நகர்வுக்கு காத்திருப்பது அம்பலமாகியுள்ளது.

சட்டத்தில் இடமில்லை...
எனினும், இந்த வழிகாட்டுதல்களை கடுமையாக எதிர்த்து தமிழக அரசு ஜூன் 9ஆம் தேதி அன்று கடிதம் எழுதியுள்ளது. இந்தச் சூழலை கருத்தில் கொண்டு மே 27ல் பிரதமரை சந்தித்தபோது மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான கவலைகளை குறிப்பிட்டு முதல்வர் விஜய் கடிதம் அளித்துள்ளார்.
2018ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழகத்துக்கு உறுதி செய்யப்பட்ட நீர் பங்கீட்டை எந்த ஒரு புதிய நடுவர் மன்றமும் மாற்ற முடியாது. எனவே, தமிழகத்துக்கு கர்நாடகா அளிக்க வேண்டிய 177. 25 டிஎம்சி யில் எந்த மாற்றமும் ஏற்படாது. 1956ம் ஆண்டு நதிநீர் தாவா சட்டப்பிரிவு 4, 1-ன் படி ஏற்கெனவே தீர்க்கப்பட்ட பிரச்சினையை மீண்டும் திறக்க சட்டத்தில் இடமில்லை.

ஆபத்து நீங்கவில்லை...
2018ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் உபரி நீர் குறித்து துல்லியமாக கணக்கிடப்படவில்லை, எனவே இதுபற்றி கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு அசல் வழக்கை தொடர்ந்தது. 1956ம் ஆண்டு நதிநீர் தாவா சட்டப்படி, இத்தகைய புதிய நதி நீர் பிரச்சினையை தீர்க்க புதிய நடுவர் மன்றத்தால் மட்டுமே முடியும் என்பது உச்ச நீதிமன்றத்தில் நமது வாதம் ஆகும். காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை முற்றிலுமாக நிராகரித்து விட்டது எனக் கூறுவது முற்றிலும் தவறானது. காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்கவில்லை. மாறாக எவ்வித கருத்தும் கூறாமல் மத்திய நீர்வள ஆணையத்திடமே திருப்பி அனுப்பியுள்ளது. எனவே, ஆபத்து இன்னும் நீங்கவில்லை.

வேடிக்கை பார்க்க முடியாது
ஒன்றிய அரசும், கர்நாடக அரசும் புதிய வழிகாட்டுதலின் கீழ் மறைமுகமாக மேகதாது திட்டத்தை மேற்கொள்ள முற்படும் வேளையில் நாம் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. அந்த வகையில் ஒன்றிய அரசின் தன்னிச்சையான நகர்வுகளை முடக்குவதற்கும், உபரி நீர் மீது தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் ஒரு தலைசிறந்த அணுகுமுறையாக புதிய நடுவர் மன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் ஆனந்த் பேசினார்.