Also Watch
Read this
சட்டப்பேரவையில், எம்.எல்.ஏ.க்களுக்கு குடிநீர் வழங்கும் முறையில், டம்ளருக்கு மாற்றாக பாட்டிலில் வழங்கும்படி, சபாநாயகருக்கு, தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா கோரிக்கை விடுத்தார்.
பாட்டிலில் குடிநீர் தரவேண்டும் என்று, பிரேமலதா கோரிக்கை விடுத்த மறுகணம், ’அண்ணியாரே வேண்டாம்’ என்று திமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் மறுத்தார். அப்போது, ’ஓ.பி.எஸ். தனது சொந்த அனுபவத்தை சொல்கிறாரோ?’ என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதால், அவையில் சிரிப்பலை எழுந்தது.

பிரேமலதா பேச்சு... சிரிப்பலை...
தமிழக சட்டப்பேரவையில், தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா பேசும்போது, "சட்டப் பேரவையில், சில்வர் டம்ளர்களில் குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், ஊழியர்கள் சிரமம் அடைகின்றனர். இதற்கு பதிலாக, கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், “கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் வழங்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. அப்படி வழங்கினால், கோபம் வரும்போது, தூக்கி எறியவும் வாய்ப்பு உள்ளது,” என்றார்.

உடனே குறுக்கிட்ட திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, “ஓபிஎஸ் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் இதைப் பேசுகிறாரா? என்பதை அறிய விரும்புகிறேன்” எனக் கூறியதால், இதனை அடுத்து, அவையில் சிரிப்பலை நிலவியது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதை தான், தங்கம் தென்னரசு மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து...
தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது;
சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆளுநர் உரை தமிழ்த் தாய் வாழ்த்தோடு தொடங்கியதை வரவேற்கிறேன். அதேபோல, ஆளுநர் உரை ஆளும் கட்சியின் உரையாக இருந்தது. ஆளுநரின் 37 நிமிட உரை முழுவதும் ஆளும் தவெக அரசுக்கு ஆதரவாக மட்டுமே எழுதப்பட்டிருந்தது. 37 நிமிட உரையில் தமிழ் உச்சரிப்பில் 37 தவறுகள் இருந்தன, இது வேதனையானது. நமது தலைவர்களின் பெயரை சொல்லும் போது அத்தனை தவறுகள் இருந்தது.

மேகதாது விவகாரம்...
மேகதாது அணை விவகாரத்தில், யாரும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இப்போது புதியவர்கள் முதல்வர்களாக பொறுப்பேற்று உள்ளனர். எனவே, காவிரி விவகாரத்தை தமிழக முதல்வர் கர்நாடக முதல்வருடன் நட்பு ரீதியாக பேசித் தீர்க்க வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியாக எதிர்கொண்டு இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வினை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.