Also Watch
Read this
சென்னை ஓட்டேரி அருகே முன்விரோதம் காரணமாக, ரவுடியை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தான் இந்த கொலைக்கு காரணம் என போலீசாரின் விசாரணையில் கூறப்படும் நிலையில் இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
நண்பர்களிடையே மனக்கசப்பு
சென்னை, ஓட்டேரி எஸ்விஎம் நகரைச் சேர்ந்த அஜய் மீது கொலை, கொலை முயற்சி, போதை பொருள் வழக்கு உட்பட 5க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவரும் அதே பகுதியை சேர்ந்த அருண்ராஜ் என்பவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து உள்ளனர். ஒன்றாக ஊர் சுற்றுவது, பிரச்னை என்றால் ஒன்றாக செல்வது என அனைத்திலும் ஒன்றாக இருந்துள்ளனர். இந்நிலையில் அருண்ராஜை விட அஜய் ஏரியாவில் கெத்தாக வலம் வந்துள்ளார். இது அருண்ராஜ்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட ஆரம்பித்து பேச்சுவார்த்தையை குறைத்துள்ளனர்.

சகோதரி குறித்து...
அதன்பின், அஜய் தொடர்ந்து அருண்ராஜை பார்க்கும் இடங்களில் எல்லாம் கிண்டல் செய்வது, அவரது குடும்பத்தினரை கிண்டல் செய்வது போன்ற தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இருவரும் அடிக்கடி மோதிக் கொண்ட நிலையில், பிரச்னை இவர்களுக்குள் இன்னும் தீவிரமடைந்துள்ளது. இதில் தலையிட்ட சில நண்பர்கள் சமாதானம் பேசி பிரச்னையை தீர்த்து வைத்த நிலையில் சில நாட்கள் மட்டும் இவர்கள் அமைதியாக இருந்துள்ளனர். இதற்கிடையே அருண்ராஜின் சகோதரி குறித்து அஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறாக கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருண்ராஜ் தட்டிக்கேட்வே அவர் மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

திருநங்கையுடன் சேர்ந்து...
இதனால் வெறியான அருண்ராஜ் அஜயின் கதையை முடிக்க முடிவெடுத்துள்ளார். அதற்காக தனது நண்பர்களான தமிழரசன், தனுஷ், சுனில், சிவா மற்றும் 17 வயது சிறுவனை இத்திட்டத்தில் இணைத்துக்கொண்ட அருண்ராஜ், அஜய் எப்போதெல்லாம் தனியாக செல்கிறார், அவருடன் ஆட்கள் இருக்கிறார்களா, இல்லையா என அனைத்தையும் நோட்டமிட்டு வந்துள்ளார். அப்போது அஜய், திருநங்கை காஜல் என்பவருடன் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதன்காரணமாக காஜலை தொடர்பு கொண்ட அருண்ராஜ், திருநங்கையிடம் நன்றாக பேசி நடந்த எல்லாவற்றையும் கூறி, அவர் மூலம் அஜயை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு காஜலும் ஓகே சொல்ல, இருவரும் இணைந்து பக்காவாக ஸ்கெட்ச் போட ஆரம்பித்துள்ளனர்.

தனியாக சென்று கொண்டிருந்த போது...
சம்பவத்தன்று அஜயும், காஜலும் ஊர் சுற்றிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காஜலை, அஜய் அவரது வீட்டில் இறக்கிவிட்டு தனியாக சென்று கொண்டிருந்தார். இந்த தகவலை காஜல் அருண்ராஜிடம் கூற, அவரை பின்தொடர்ந்து இரண்டு பைக்குகளில் வந்த அருண்ராஜ் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல், அஜயை கண்டத்துண்டமாக கை, கால், கழுத்து என அனைத்து பகுதிகளிலும் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

6 பேர் கைது, விசாரணை
தகவலறிந்து வந்த போலீசார் அஜயின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அருண்ராஜ் மற்றும் அவரது நண்பர்களான தமிழரசன், தனுஷ் உள்ளிட்ட 6 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.