Also Watch
Read this
By: Manigandan Raja
ஈரான் மீதான தாக்குதலை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கி உள்ளது. தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடந்தது. ஈரான் அரச தலைவர் அயதுல்லா கமேனியின் இருப்பிடம், அலுவலகம், அதிபர் மாளிகையை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை முன்பே அறிந்து மறைவிடத்திற்கு இடமாற்றப்பட்டார் கமேனி.


பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதம் இருக்கலாமா?
உலகின் மிகப்பெரிய பயங்கரவாத சக்தி என்பதால் ஈரான் ஆட்சியாளர்களை குறிவைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி உள்ளார். பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதம் இருக்கவே கூடாது என்பதால் குண்டுகளை வீசுவதாகவும் கூறி உள்ளார். ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலால், மத்தியக் கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் இஸ்ரேல் முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இனி முடிவு எங்கள் கையில் - ஈரான்
அத்துமீறி தாக்குதலில் ஈடுபடுவோரை நசுக்குவோம் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. போரை ஆரம்பித்து விட்டீர்கள், இனி முடிவு எங்கள் கையில் என்றும் சூளுரைத்துள்ளது. அரச தலைவர் அயதுல்லா கமேனி பத்திரமாக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. அதிபரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறப்பு நிரந்தர அவசரகால நிலை
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஈரானுக்கு எதிராக முன்கூட்டிய தாக்குதல் என்று கூறப்படும் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இன்று பிப்ரவரி 28ஆம் தேதி, காலையில் இஸ்ரேல் முழுவதும் சிறப்பு நிரந்தர அவசரகால நிலையை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும்நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

முன் கூட்டியே நடவடிக்கை
ஈரான் மீதான இந்தத் தாக்குதலில் இஸ்ரேலுடன் அமெரிக்காவும் இணைந்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி, இஸ்ரேல் - ஈரான் போா் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் தனது நாட்டு குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை பிப்ரவரி 27ஆம் தேதியிலேயே அறிவுறுத்தி இருந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved