Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பு பரிந்துரை :
அமெரிக்காவில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதலாக 10 முதல் 12.5 சதவீதம் வரை வரி விதிக்க வர்த்தக பிரதிநிதி பரிந்துரை செய்துள்ளது.
கட்டாய உழைப்பை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் தங்கள் சந்தைகளில் நுழைவதை தடை செய்ய தவறியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் 54 நாடுகள் மீது இந்த வரி விதிப்புக்கு அமெரிக்க வர்த்தககள் பிரதிநிதி அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக 10 சதவீதமும், வர்த்தகம் செய்யாத இந்தியா, சீனா, உள்ளிட்ட நாடுக ளுக்கு 12.5 சதவீதமும் கூடுதலாக வரி விதிக்க பரிந்துரை செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தம்பட்டம் :

தாம் இல்லையென்றால் இஸ்ரேல் என்கிற நாடே இருந்திருக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், ஈரான் மீதான போருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன்னை இழுத்து விடவில்லை எனவும், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதால் தாமே இந்த போரை தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அணு ஆயுதம் இருந்தால் ஈரானின் முதல் இலக்காக இஸ்ரேல்தான் இருந்திருக்கும் எனவும், ஆகவே, தாம் மட்டும் இல்லை என்றால் இஸ்ரேல் என்கிற நாடே இருந்திருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல் :

அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்கிற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஏற்ப ஈரான் தலைவராக மொஜ்தபா கமேனி சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றாலும், பேச்சுவார்த்தையில் சிலவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதோடு, மொஜ்தபாவை நேரில் சந்திக்க விரும்புவதாகவும், நிபந்தனைகள் அமலுக்கு வருவதை பொறுத்து, அனைத்தும் சுமூகமாக முடிந்தால், அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை :
பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் சமீபத்தில் ரயில் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதில், 3 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியாகினர்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் மஸ்துங், நுஷ்கி, ஜெஹ்ரி, குஜ்தார் மற்றும் கெச் ஆகிய நகரங்களில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பித்னா-அல்-இந்துஸ்தான் என்கிற பயங்கரவாத அமைப்பினர் துப்பாக்கி சூடு நடத்தினர். தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
குவைத் விமான நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் :

குவைத் விமான நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் புதன் அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் விமான நிலையத்தின் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, குவைத் விமான நிலையத்தின் செயல்பாடுகள் நாள் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களையும், அதன் நட்பு நாடுகளையும் அச்சுறுத்தும் நோக்கில் ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved